டெல்லி: இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டித் தொடரில் இந்திய பேட்ஸ்மேன்கள் சொதப்பி வரும் நிலையில், இளம் வீரர்கள் மயாங்க் அகர்வால் மற்றும் பிருத்வி ஷா கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான அணியில் இடம்பெறுவார்கள் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடக்கிறது. இதில் முதல் டெஸ்டில் இங்கிலாந்து 31 ரன்களில் வென்றது. லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்களில் இங்கிலாந்து வென்றது.
மூன்றாவது டெஸ்ட் போட்டி நாட்டிங்ஹாமில் உள்ள டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் வரும் 18ம் தேதி துவங்குகிறது. ஏற்கனவே மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது.
நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிக்கான அணி அறிவிக்கப்பட உள்ளது. இதற்காக தேர்வுக் குழு அடுத்த வாரம் கூட உள்ளது.
இந்த நிலையில், முதல் இரண்டு டெஸ்ட்களில் இந்திய அணியின் பேட்டிங் மிகவும் மோசமாக உள்ளது. குறிப்பாக முதல் நிலை வீரர்கள் சொதப்பினர். விராட் கோஹ்லியைத் தவிர மற்றவர்கள் ரன் குவிக்க தடுமாறுகின்றனர்.
அதனால், கடைசி இரண்டு டெஸ்ட்களுக்கான அணியில் கர்நாடகாவைச் சேர்ந்த மயாங்க் அகர்வால் மற்றும் மும்பையைச் சேர்ந்த பிருத்வி ஷா இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருவரும் மிகச் சிறந்த துவக்க ஆட்டக்காரர்களாக உள்ளனர்.
உள்ளூர் போட்டிகளில் மயாங்க் அகர்வால் 105.45 சராசரியுடன் உள்ளார். கடந்தாண்டு ரஞ்சிக் கோப்பையில் அதிக ரன்கள் குவித்த வீரரான மயாங்க், சமீபத்தில் இங்கிலாந்து ஏ அணிக்கு எதிராகவும் சிறப்பாக விளையாடினார். மேலும் தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிராக கடந்த வாரம் நடந்த போட்டியிலும் இரட்டை சதம் அடித்தார்.
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடிய பிருத்வி ஷா, அதைத் தொடர்ந்து ஐபிஎல் போட்டியிலும் தனது திறமையை நிரூபித்தார். தென்னாப்பிரிக்கா ஏ அணிகுக்கு எதிரான ஆட்டத்தில் சதமடித்தார்.