பெங்களூரு: 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் போது ஹர்திக் பாண்டியா பதிவிட்ட புகைப்படத்தில் ரிஷப் பண்ட் தோளின் போது இருக்கும் கை யாருடையது என்ற ரசிகர்களின் நீண்ட கால சந்தேகம் முடிவுக்கு வந்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் சக வீரர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்வது மிகவும் சாதாரணம். அதேபோல் விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இன்ஸ்டாகிராமில் தங்களுடன் ஒப்பந்தம் செய்த விளம்பரங்களை பகிர்வார்கள். அது சில நேரங்களில் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகும்.

ஆனால் 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் போது இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியா பதிவிட்ட புகைப்படம் இன்று வரை ரசிகர்களிடையே விவாதிக்கப்பட்டு வருகிறது. உலகக்கோப்பை தொடரின் போது இங்கிலாந்து மண்ணில் இந்திய வீரர்கள் பலரும் ஜாலியாக ஊர் சுற்றினர். அப்போது வங்கதேச அணிக்கு எதிரான போட்டிக்கு பின், இந்திய அணியின் 5 வீரர்கள் ஊர் சுற்ற சென்றனர்.
இந்திய அணியின் ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரித் பும்ரா, எம்எஸ் தோனி, மயங்க் அகர்வால் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் புகைப்படம் எடுத்தனர். அதனை ஹர்திக் பாண்டியா இன்ஸ்டாகிராமில் பதிவிட, அந்த புகைப்படத்தில் ரிஷப் பண்ட் தோளின் மீது இருக்கும் கை யாருடையது என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்தது. சிலர் ரிஷப் பண்ட் காதலி தான் அது என்று கிண்டல் செய்து வந்தனர்.
கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்கும் மேலாக ரிஷப் பண்ட் தோளின் மீது இருப்பது யாரின் கை என்பது புரியாமல் ரசிகர்கள் அவ்வப்போது அந்த புகைப்படத்தை ட்ரெண்ட் செய்து வந்தனர். இந்த நிலையில் ஒரு வழியாக இந்திய அணியின் தொடக்க வீரர் மயங்க் அகர்வால், ரிஷப் பண்ட் தோளின் மீது இருப்பது யாரின் கை என்பதை ஓபனாக கூறியுள்ளார்.
இதுகுறித்து இந்திய அணி வீரர் மயங்க் அகர்வால் தனது ட்விட்டர் பக்கத்தில், ரிஷப் பண்ட் தோள் மீது இருப்பது என்னுடைய கைகள் தான். மற்றவர்கள் கூறிய விளக்கங்கள், செய்திகள் அனைத்தும் பொய் தான் என்று பதிவிட்டுள்ளார். இதன் மூலம் 4 ஆண்டுகளுக்கு பின் ரசிகர்களின் சந்தேகத்தை தீர்ந்துள்ளதாக மீண்டும் அந்தப் புகைப்படம் ட்ரெண்டாகி வருகிறது.