ஹைதராபாத்: இந்திய அணியின் இளம் வேகப் பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் முதல் ஓவரின் முதல் பந்தில் விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்தார். இந்த தொடரில் அவர் சிறப்பாக பந்து வீசியதை அடுத்து அவருக்கு இந்திய அணியில் தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்படும் நிலை ஏற்பட்டு உள்ளது.
150 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசும் ஆற்றல் கொண்ட மயங்க் யாதவ் வங்கதேச டி20 தொடரில் தனது சர்வதேச அறிமுகத்தை பெற்றார். முதல் இரண்டு போட்டிகளில் இரண்டு விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். அவரது பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. இந்த நிலையில் மூன்றாவது டி20 போட்டியில் அவருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.

அணியின் முதன்மை வேகப் பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங்குக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக மயங்க் யாதவ் முதல் ஓவரை வீசினார். வங்கதேச அணியின் துவக்க வீரர் பர்வேஸ் உசைன் இமான் முதல் பந்திலேயே பெரிய ஷாட் அடிக்க ஆசைப்பட்டார். ஆனால், அவர் சற்று தாமதமாக பந்தை அடித்தார். அதனால் பந்து அவரது கிளவுஸில் பட்டு முதல் ஸ்லிப்பில் நின்று இருந்த ரியான் பராக் வசம் சென்றது. ரியான் பந்தை லாவகமாக கேட்ச் பிடித்தார். இதன் மூலம் மயங்க் யாதவ் முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தினார்.
சர்வதேச டி20 போட்டியில் முதல் பந்தில் முதல் விக்கெட் வீழ்த்தும் சாதனையை பலரும் நிகழ்த்தி இருந்தாலும் இந்திய அளவில் மூன்று பந்துவீச்சாளர்கள் மட்டுமே அதை செய்து இருந்தனர். தற்போது மயங்க் யாதவ் அந்த சாதனைப் பட்டியலில் நான்காவது இந்திய பந்துவீச்சாளராக இணைந்து இருக்கிறார்.
இதற்கு முன் புவனேஸ்வர் குமார், ஹர்திக் பாண்டியா மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகிய மூவர் மட்டுமே டி20 இன்னிங்ஸின் முதல் ஓவரின் முதல் பந்தில் விக்கெட் வீழ்த்தி இருந்தனர். புவனேஸ்வர் குமார் மூன்று முறை இந்த சாதனையை செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மயங்க் இந்த அரிய சாதனையை செய்துள்ளார்.
தனது அறிமுக தொடரிலேயே மூன்று போட்டிகளில் நான்கு விக்கெட்களை வீழ்த்தி அசத்தியிருக்கிறார் மயங்க் யாதவ். இதை அடுத்து அவருக்கு இந்திய அணியில் நிரந்தர இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 297 ரன்களை எடுத்தது. அடுத்து ஆடிய வங்கதேச அணி 164 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி 133 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பதிவு செய்தது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரை இந்திய அணி 3 - 0 என வென்றது.