மும்பை: இந்தியாவின் அதிவேகப் பந்துவீச்சாளர் என கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அனைவராலும் கவனிக்கப்பட்ட மயங்க் யாதவ், மூன்றாவது முறையாக மீண்டும் காயத்தில் சிக்கியுள்ளார். ஐபிஎல் தொடரில் அவரது அணியான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மயங்க் யாதவ் காயம் காரணமாகத் தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்குப் பதிலாக நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர் வில்லியம் ஓ'ரூர்க் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் ஆறு மாத காலம் மயங்க் யாதவ் பிசிசிஐ-யின் விளையாட்டு அறிவியல் மற்றும் மருத்துவக் குழுவின் நேரடிக் கண்காணிப்பில் இருந்தார். அதற்குப் பிறகு ஐபிஎல் தொடரில் இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடிய அவர், எட்டு ஓவர்களில் 100 ரன்களை வாரி இறைத்து இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தினார்.

மேலும் அவரது வேகம் 150 கிமீ என்ற அளவிலிருந்து சுமார் 135 கிமீ வரை சரிவைச் சந்தித்தது. மேலும், தனது பந்துவீச்சு முறையையும் அவர் மாற்றி அமைத்திருந்தார். காயத்தில் சிக்கக் கூடாது என அனைத்தையும் செய்தும், அவர் மீண்டும் காயத்தில் சிக்கியுள்ளார்.
2024 ஐபிஎல் தொடரின் முடிவிலும் அவர் காயத்தில் சிக்கியிருந்தார். அதன் பிறகு மீண்டும் இந்தியா டி20 அணியில் இடம் பிடித்து ஆடியபோது, அப்போது மீண்டும் காயத்தில் சிக்கினார். தற்போது மூன்றாவது முறையாக மீண்டும் காயத்தில் சிக்கியுள்ளார். இந்த ஓராண்டு காலமும் அவர் பிசிசிஐ-யின் மருத்துவக் கண்காணிப்பில்தான் இருந்தார். காயத்திலிருந்து மீண்டு வருவதற்கான முயற்சிகளைச் செய்து வந்தார்.
இதற்கிடையே, பிசிசிஐ சிறப்பு பயிற்சி மையத்தில் அவரது பந்துவீச்சு முறையையும் மாற்றி அமைத்திருக்கிறார்கள். இப்படி அனைத்தையும் செய்தும், அவர் மீண்டும் மீண்டும் காயத்தில் சிக்கி வருவது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. பிசிசிஐ மயங்க் யாதவைச் சரியாகக் கையாளவில்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதற்கு முன்பு இவரைப் போலவே அதிவேகத்தில் பந்துவீசி வந்த உம்ரான் மாலிக் இதே போன்ற நிலையில் சிக்கியிருந்தார். அவரும் 150 கிமீ-க்கும் அதிகமாக வேகத்தில் பந்துவீசியவர். ஆனால், அவர் தொடர்ந்து காயத்தில் சிக்கி பின்னர் தனது ஃபார்மை இழந்து, இந்திய அணியிலும் ஐபிஎல் அணிகளிலும் சரியான வாய்ப்பின்றித் தவித்து வருகிறார். கிட்டத்தட்ட மயங்க் யாதவும் அதே நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்.
மேலும், ஐபிஎல் தொடரில் பங்கேற்க வேண்டிய மயங்க் யாதவுக்கு முழு உடல் தகுதி பெரும் முன்பே ஒப்புதல் அளிக்கப்பட்டதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 22 வயதாகும் நிலையில், மயங்க் யாதவ் ஒரே ஆண்டில் மூன்று முறை காயத்தில் சிக்கியிருப்பது அவரது எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கி இருக்கிறது.