மும்பை: 7வது ஐ.பி.எல். இறுதிப் போட்டியை திடீரென பெங்களூருக்கு மாற்றியதற்கு மும்பை கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
நடப்பு ஐ.பி.எல். போட்டிகளின் இறுதி ஆட்டம் ஜூன் 1-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த ஆட்டம் முதலில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுவதாக இருந்தது.

ஆனால் சில நாட்களுக்கு முன்பாக திடீரென இந்த ஆட்டம் பெங்களூர் சின்னசாமி மைதானத்துக்கு மாற்றப்படுவதாக கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. கிரிக்கெட் வாரியத்தின் இந்த திடீர் மாற்றத்துக்கு மத்திய அமைச்சர் சரத் பவார் தலைமையிலான மும்பை கிரிக்கெட் சங்கம் கடுமையாக எதிர்த்துள்ளது.
மேலும் எந்த ஒரு காரணத்தையும் தெரிவிக்காமல் திடீரென இறுதி ஆட்டத்தை மும்பையில் இருந்து மாற்றியதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், ஐ.பி.எல். நிர்வாகம் கொடுத்த அடையாள அட்டைகளை மும்பை கிரிக்கெட் சங்கத்தினர் திரும்ப ஒப்படைத்துள்ளனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மும்பை கிரிக்கெட் சங்கத்தின் ஊடக மேலாளர் வினோத் தேஷ்பாண்டே, கிரிக்கெட் வாரியத்தின் நடவடிக்கை கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்றார்.