2009ல் தீவிரவாதிகள் தாக்குதல்
கடந்த 2009ல் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணியினர் பயணம் செய்த பேருந்தை குறிவைத்து லாகூரில் தீவிரவாதிகள் தாக்குதல் மேற்கொண்டனர். இதில் 6 வீரர்கள் காயமடைந்தனர். மேலும் 6 காவலர்கள் உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து அதுமுதல் பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாட எந்த நாடும் முன்வரவில்லை.
டிசம்பரில் மீண்டும் துவக்கம்
இதையடுத்து கடந்த 2009 முதல் பாகிஸ்தானில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் எதுவும் நடைபெறவில்லை. பாகிஸ்தான் மற்ற நாடுகளில் தன்னுடைய தொடர்களை நடத்திவந்தது. இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதத்தில் இலங்கை அணியினர் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டியில் விளையாடினர். தொடர்ந்து வங்கதேசமும் விளையாடியது.
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா விளையாட வேண்டும்
இந்நிலையில், பாகிஸ்தானில் மீண்டும் சர்வதேச கிரிக்கெட் தொடர்களை ஊக்குவிக்கும்வகையில், அங்கு மற்ற நாடுகள், குறிப்பாக இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் விளையாட முன்வர வேண்டும் என்று மேரிலேபோன் கிரிக்கெட் கிளப் தலைவர் குமார் சங்ககாரா கேட்டுக் கொண்டுள்ளார்.
இங்கிலாந்து, ஆஸி யோசிக்க வேண்டும்
பாகிஸ்தானில் தற்போது பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள், அங்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வது குறித்து யோசிக்க வேண்டும் என்றும், அதற்கு முன்னோடியாக எம்சிசியின் சுற்றுப்பயணம் அமைந்துள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். கடந்த பிப்ரவரி மாதத்தில் அங்கு எம்சிசி அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது குறிப்பிடத்தக்கது.
2 டெஸ்ட் தொடரை விளையாடலாம்
இந்நிலையில் எடுத்தவுடன் பாகிஸ்தானில் 5 டெஸ்ட் தொடரை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றும் முதலில் 2 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரும், தொடர்ந்து சிறிது இடைவெளி விட்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரும் விளையாடலாம் என்றும் சங்ககாரா ஆலோசனை வழங்கியுள்ளார்.