
எந்தப் போட்டி?
சையது முஷ்டாக் அலி தொடரில் மேகாலயா - மிசோரம் இடையே டி20 லீக் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் மிசோரம் டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தது. மேகாலயா அணி முதலில் பேட்டிங் செய்தது.

கடைசி மூன்று ஓவர்கள்
அந்த அணி வீரர்கள் ஓவருக்கு எட்டு ரன்கள் என்ற ரன் விகிதம் குறையாமல் பேட்டிங் செய்து வந்தனர். ரவி தேஜா 31 பந்துகளில் 53 ரன்கள் குவித்தார். அபய் நெகி கடைசி மூன்று ஓவர்கள் மீதம் இருக்கும் போது களமிறங்கினார்.

மிரட்டல் அரைசதம்
மிரட்டலாக ஆடிய அபய் 14 பந்துகளில் அரைசதம் அடித்தார். அதில் ஆறு சிக்ஸர்கள், 2 ஃபோர் அடங்கும். அதில் வரிசையாக நான்கு சிக்ஸ் அடித்து வியப்பை ஏற்படுத்தினார். 20 ஓவர்கள் முடிவில் 50* ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் நின்றார் அபய் நெகி. மேகாலயா அணி 207 ரன்கள் குவித்தது.

விரைவாக அரைசதம் அடித்தார்
அபய் நெகி 14 பந்துகளில் அரைசதம் அடித்ததன் மூலம் சையது முஷ்டாக் அலி தொடரின் வரலாற்றில் மிக விரைவாக அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையை செய்தார்.

ராபின் உத்தப்பா சாதனை
முன்னதாக ராபின் உத்தப்பா அந்த சாதனையை தன்வசம் வைத்திருந்தார். தற்போது அதை முறியடித்துள்ளார் அபய் நெகி. மேலும், இந்திய மண்ணில் அடிக்கப்பட்ட மிக விரைவான அரைசதம் என்ற சாதனைப் பட்டியலில் கேஎல் ராகுலுடன் முதல் இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.

ராகுல் சாதனை சமன்
கேஎல் ராகுல் ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு எதிராக, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக ஆடும் போது 14 பந்துகளில் அரைசதம் கடந்து சாதனை செய்து இருந்தார்.

யுவராஜ் சிங் நம்பர் 1
அதிவேக டி20 அரைசதம் அடித்த இந்திய வீரர் என்ற சாதனை யுவராஜ் சிங் வசம் உள்ளது குறிப்பிடத்தக்கது. அவர் இங்கிலாந்தில் நடந்த டி20 உலகக்கோப்பையில் 12 பந்துகளில் அரைசதம் அடித்து அந்த சாதனையை நிகழ்த்தி இருந்தார்.

ஐபிஎல் அணிகளை ஈர்க்குமா?
அடுத்த மாதம் ஐபிஎல் ஏலம் நடக்க இருக்கும் நிலையில், அபய் நெகி அதிரடி ஆட்டம் ஆடி சாதனை செய்துள்ளார். எனினும், மிசோரம் அணி பலமான அணி இல்லை என்பதால், அந்த அணிக்கு எதிராக அபய் நெகி அடித்த அதிவேக அரைசதம் ஐபிஎல் அணிகளை ஈர்க்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











