டாக்கா: "நிர்வாகப் பிரச்சினைகளைத் தவிர்த்துவிட்டு எங்களைச் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பினாலும், நாங்கள் அங்கும் சென்று விளையாடத் தயாராக இருக்கிறோம்" என்று வங்கதேச டி20 உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றுள்ள ஆல்ரவுண்டர் மெஹதி ஹசன் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். அதாவது இந்தியாவில் பாதுகாப்பு இல்லை எனக் கூறி வங்கதேச அணி ஆட உள்ள உலகக்கோப்பை போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் போர்க்கொடி தூக்கி உள்ள நிலையில், அதற்கு நேர்மாறான கருத்தை கூறி இருக்கிறார் மெஹிதி ஹசன்.
பிப்ரவரி 7-ம் தேதி இந்தியாவில் தொடங்கவுள்ள டி20 உலகக் கோப்பையில், வங்கதேச அணி பங்கேற்குமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. ஐபிஎல் விவகாரத்தில் முஸ்தபிசுர் ரஹ்மான் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியா வருவதைத் தவிர்க்கும் முயற்சியில் வங்கதேச வாரியம் ஈடுபட்டுள்ளது.

இந்தச் சூழலில், வங்கதேச அணியின் ஆல்ரவுண்டர் மெஹதி ஹசன் 'டெய்லி ஸ்டார்' ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, "உலகக் கோப்பையில் பங்கேற்பதில் உள்ள நிச்சயமற்ற தன்மை என்பது நிர்வாகம் சார்ந்த பிரச்சினை. அதை அதிகாரிகள் பார்த்துக்கொள்வார்கள். வீரர்களின் வேலை என்பது களத்தில் இறங்கி விளையாடுவது மட்டுமே.
எங்களைச் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பி விளையாடச் சொன்னாலும், நாங்கள் அங்கும் சென்று விளையாடுவோம். இதில் எந்த வீரருக்கும் மாற்றுக்கருத்து இருப்பதாக நான் நினைக்கவில்லை" என்று அவர் தனது நிலைப்பாட்டைத் தெளிவாகக் கூறியுள்ளார்.
மெஹதி ஹசன் இவ்வாறு கூறினாலும், முன்னாள் கேப்டன் நஸ்முல் ஹொசைன் சாண்டோ வேறுவிதமான கருத்தைத் தெரிவித்துள்ளார். தற்போதைய அணியில் இடம்பெறாத அவர் கூறியதாவது, "ஒவ்வொரு உலகக் கோப்பைக்கு முன்பும் இதுபோன்று ஏதாவது ஒரு பிரச்சினை வங்கதேச அணிக்கு வருகிறது. நான் சில உலகக் கோப்பைகளில் விளையாடியவன் என்ற முறையில் சொல்கிறேன், இது நிச்சயம் வீரர்களின் மனநிலையைப் பாதிக்கும்.
"எதுவும் எங்களைப் பாதிக்காதது போலவும், நாங்கள் மிகவும் தொழில்முறை கிரிக்கெட் வீரர்கள் போலவும் நாங்கள் வெளியே நடிக்கிறோம். ஆனால், உள்ளுக்குள் அது எவ்வளவு கடினம் என்பது எங்களுக்குத்தான் தெரியும். இந்த அரசியல் மற்றும் நிர்வாகப் பிரச்சினைகள் இல்லாமல் இருந்தால் வீரர்கள் இன்னும் சிறப்பாகச் செயல்பட முடியும்" என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இதற்கிடையில், வங்கதேச கிரிக்கெட் வாரியம் ஐசிசி-யிடம் புதிய கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது, இந்தியா செல்லும் வங்கதேச அணியில் உள்ள வீரர்கள், பயிற்சியாளர்கள், உதவியாளர்கள் மற்றும் நிர்வாகிகள் என "ஒவ்வொரு தனிநபருக்கும் தனித்தனியான பாதுகாப்பு உத்தரவாதம்" வழங்க வேண்டும் என்று வங்கதேச கிரிக்கெட் வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதற்குப் பதிலளித்துள்ள ஐசிசி, முழுமையான பாதுகாப்புத் திட்டத்தை வங்கதேசத்திடம் வழங்கியுள்ளதாகவும், இறுதி முடிவை வங்கதேச வாரியத்திடமே விட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்தியா வராவிட்டால் புள்ளிகளை இழக்க நேரிடும் என ஐசிசி எச்சரித்துள்ள சூழலில், வீரர்களின் இந்தக் கருத்துகள் முக்கியத்துவம் பெறுகின்றன.