அடிலைட்: இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடரில் பவுன்சர்கள் அதிக அளவில் வீசப்பட வேண்டும் என்று முன்னாள் வேகப் பந்து வீச்சாளர் மெர்வ் ஹியூக்ஸ் கூறியுள்ளார்.
பவுன்சர் பந்தில் சிக்கி இளம் ஆஸ்திரேலிய வீரர் பில் ஹியூக்ஸ் பலியான சம்பவத்தின் வடு கூட இன்னும் மாறாத நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் பவுன்சர்களார் நிரம்பியிருக்க வேண்டும் என்று மெர்வ் ஹியூக்ஸ் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
பில் ஹியூக்ஸ் மரணத்தால் வேகப் பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சில் தொய்வும், மாற்றமும் வரக் கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து மெர்வ் ஹியூக்ஸ் கூறுகையில், பில் ஹியூக்ஸ் மரணம் வேகப் பந்து வீச்சாளர்களை பாதித்து விடக் கூடாது. அவர்கள் வழக்கம் போல பந்து வீச வேண்டும். குறிப்பாக பவுன்சர்களைக் குறைக்கக் கூடாது.
ஒரேயடியாக பவுன்சர்களை அவர் விட்டு விடக் கூடாது. அது தொடர வேண்டும். அப்போதுதான் கிரிக்கெட் உயிர்ப்புடன் இருக்கும், பேசப்படும்.
என்னைப் பொறுத்தவரை இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டியில் முதல் பந்தே பவுன்சராக இருக்க வேண்டும். இது மோசமான யோசனையாகக் கூட இருக்கலாம். ஆனால் நாம் தொடர்ந்து விளையாட வேண்டும்.
ஹியூக்ஸ் மரணம் சோகமானதுதான் என்றாலும் கூட, பந்து வீச்சு எப்போதும் போலவே இருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன்.
இந்தியாவுடனான போட்டியை நேர்மையாக, போட்டி மனப்பான்மையுடன் விளையாட வேண்டும் என்று கேப்டன் கிளார்க் கூறியுள்ளார். அதை நான் வழிமொழிகிறேன்.
கடந்த 100 ஆண்டு கால கிரிக்கெட் வரலாற்றில் பவுன்சர்களும் இருந்து வருகின்றன. ஹியூக்ஸ் மரணம் ஒரு தனித்த சம்பவமாகும். எனவே பவுன்சரைத் தொடர வேண்டும் என்று கூறியுள்ளார் மெர்வ் ஹியூக்ஸ்.
மெர்வ் ஹியூக்ஸ் ஆலன் பார்டர் காலத்து வேகப் பந்து வீச்சாளர் என்பது குறிப்பிடத்தக்கது. அக்காலத்தில் மிக அச்சுறுத்தலாக பந்து வீசியவர்களில் இவரும் முக்கியமானவர்.