மொஹாலி மோதல்: சிலிர்க்க வைத்த தருணங்கள்!
மொஹாலி: மொஹாலி மைதானத்தை நேற்று பொறி பறக்க வைத்து விட்டனர் இந்திய, பாகிஸ்தான் அணியினர். இரு அணிகளுமே நேற்று பெருமைப்பட்டுக் கொள்ளக் கூடிய தருணங்கள் நிறையவே இருந்தன.

- வீரேந்திர ஷேவாக்கின் பேட்டும், உமர் குல்லின் பந்தும் நேற்று பேசிக் கொண்டதைப் பார்த்தபோது, பல வருடங்களுக்கு முன்பு சச்சினும், சோயப் அக்தரும் நடத்திய போர்தான் நினைவுக்கு வந்திருக்கும். அப்படி ஒரு ஆட்டம். உமர் குல் சற்றும் மனம் தளராமல் பந்தை வீசி, அதை வாங்கி வாங்கி பவுண்டரிக்கு அனுப்பி நையப் புடைத்தார் ஷேவாக். கிட்டத்தட்ட 7 ஓவர்களுக்கு இந்த அடிதடி ரகளை தொடர்ந்தது. விளைவு - ரசிகர்கள் குஷியின் எவரெஸ்ட்டுக்குப் போய் விட்டனர்.
- சோயப் அக்தருக்குப் பதில் நேற்று களம் இறங்கிய வஹாப் ரியாஸ், இந்திய அணிக்கு நேற்று சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார். 26வது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்களைக் காலி செய்தார். விராத் கோலியை அவுட் செய்த அடுத்த பந்திலேயே யுவராஜ் சிங் அருமையான யார்க்கர் மூலம் அவுட்டாக்கி அதிர வைத்தார்.
- 42வது ஓவரின்போது 6 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் என்ற நிலையில் இந்தியா இருந்தபோது சுரேஷ் ரெய்னாவின் புத்திசாலித்தனமான ஆட்டம் அணியை நெருக்கடியிலிருந்து விலக்க உதவியது. பிரமாதமான அவரது பேட்டிங்கும், துணிச்சலான சில ஷாட்களும் இந்திய ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. பேட்டிங் பவர் பிளேயை நேற்றுதான் இந்தியா சரியாக பயன்படுத்திக் கொண்டது. அதில் இந்தியா நேற்று பெற்ற ரன்கள் 43.
- விக்ரமாதித்தனை விடாமல் துரத்திய வேதாளம் போல நேற்று சச்சின் டெண்டுல்கரை சுற்றிச் சுற்றி வந்து துரத்தியது அவுட் என்றவேதாளம். ஆனாலும் 6 முறை தப்பிப் பிழைத்தார் சச்சின். அதிலும் அப்ரிதியின் பந்தில், 3 முறை அவர் அவுட் ஆகாமல் தப்பித்தார். இதைப் பார்த்த அப்ர்தியே சச்சினை நெருங்கி புன்னகைத்தபடி ஏதோ சொல்ல,கிரிக்கெட் ராஜா வாய் விட்டுச் சிரித்தார். 6 முறை கண்டத்திலிருந்து தப்பிய சச்சின் போட்ட 85 ரன்கள்தான் நேற்று இந்தியா வெற்றி பெறக் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
- நேற்று சச்சின் பல சாதனைகளுக்குச் சொந்தக்காரரானார். நேற்று அவர் எடுத்த அரை சதம், உலகக் கோப்பைப் போட்டிகளில் போட்ட 21வது அரை சதமாகும். மேலும் உலகக் கோப்பைப் போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிராக அவர் எடுத்த 3வது அரை சதமுமாகும்.
- சச்சின் நேற்று வென்ற ஆட்ட நாயகன் விருது அவருக்கு 62வது ஆட்ட நாயகன் விருதாகும்.
- நடப்பு உலகக் கோப்பைப் போட்டியில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் வரிசையில் 2வது இடத்திற்கு உயர்ந்துள்ளார் சச்சின். மொத்தம் 464 ரன்களை இவர் இதுவரை குவித்துள்ளார். முதலிடத்தில் இலங்கையின் தில்ஷன் 467 ரன்களுடன் உள்ளார்.
- பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் வரிசையில் தற்போது 2வது இடத்தைப் பிடித்துள்ளார் சச்சின். மொத்தம் 2474 ரன்களை அவர் குவித்துள்ளார். முதலிடத்தில் ஜெயசூர்யா 2517 ரன்களுடன் உள்ளார்.
- உலகக் கோப்பைப் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்தவர் சச்சின்தான். மொத்த ரன்கள் 2260.
- ஆசிஷ் நெஹ்ராவின் நேற்றைய பவுலிங் அத்தனை பேரையும் அசரடித்து விட்டது. அவ்வளவு டெக்னிக்கலாக பந்து வீசினார் நெஹ்ரா. குறிப்பாக கடைசி ஓவர்களில் அவர் பிரமாதப்படுத்தி விட்டார். வஹாப் ரியாஸை அவர் வீழ்த்திய விதம் ரசிகர்களை கொண்டாட வைத்து விட்டது. மிகப் பிரமாதமான பவுலிங் அது. நெஹ்ரா மட்டுமல்லாமல், முனாப் படேல், ஹர்பஜன் சிங், ஜாகிர்கான், யுவராஜ் சிங் என அனைவருமே நேற்று கலக்கி விட்டனர். இதே போல இவர்கள் தொடர்ந்து நிலைப்புத்தன்மையுடன் இருந்தால் பாகிஸ்தான் என்ன, பத்து ஆஸ்திரேலியா வந்தாலும் எளிதாக பந்தாடலாம்.
- பாகிஸ்தான் அணி வலுவான நிலையை நோக்கிப் போய்க் கொண்டிருந்தபோது இந்தியாவுக்கு பிரேக்த்ரூ எனப்படும் திருப்பத்தைக் கொடுத்தது முனாப் படேலின் பந்தில் வீழந்த முகம்மது ஹபீஸ்தான். முனாப் படேலின் அந்த அபாரமான பந்து வீச்சு இந்தியாவுக்கு பெரும் திருப்புமுனையாக அமைந்தது.
உலக கோப்பை கிரிக்கெட்:சிறப்பு பக்கம்
Story first published: Thursday, March 28, 2013, 11:55 [IST]
Other articles published on Mar 28, 2013


Click it and Unblock the Notifications