டல்லாஸ்: மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் பிளே ஆப் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணியிடம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணி பரிதாபமாக வெளியேறியுள்ளது.
அமெரிக்காவில் மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் குவாலிஃபையர் முதல் போட்டியில் தோல்வியடைந்த டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணி களமிறங்கியது. ஏற்கனவே ஐபிஎல் தொடரில் இருவரும் ரிவல்ரி அணிகள் என்பதால், இந்தப் போட்டி மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எகிறியது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் பொல்லார்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து டூ பிளஸிஸ் - கான்வே இணை தொடக்கம் கொடுத்தது. இதில் டூ பிளஸிஸ் 6 ரன்களில் போல்ட் பந்தில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த சான்ட்னர் மீண்டும் போல்ட் பந்திலேயே 6 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் வந்த அதிரடி வீரர் கோடி ஷெட்டி 14 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணி 34 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. பின்னர் கான்வே - மிலிந்த் குமார் இணை சேர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
15 ஓவர் வரை இருவரும் நிதானம் காத்த நிலையில், 16வது அதிரடியை தொடங்கினர். அந்த நேரத்தில் ரஷித் கான் அட்டாக்கில் வர மிலிந்த் குமார் 37 ரன்களிலும், போல்ட் வீசிய 17வது ஓவரில் கான்வே 38 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து களமிறங்கிய டேனியல் சாம்ஸ் 8 ரன்களிலும் மில்லர் 17 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 158 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. மும்பை தரப்பில் போல்ட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் எளிய இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணிக்கு ஜஹாங்கிர் - ஸ்டேடன் இணை தொடக்கம் கொடுத்தது. அதில் ஸ்டேடன் 6 ரன்களில் ஆட்டமிழக்க, அதிரடியாக ஆடிய ஜஹாங்கிர் 18 பந்துகளில் 36 ரன்களில் விளாசி ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த நிக்கோலஸ் பூரன் 23 ரன்களில் வீழ்ந்தார். 74 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தவித்த மும்பை அணியை, பிரெவிஸ் - டிம் டேவிட் இணைந்து மீட்டனர்.
அதிரடியாக ஆடிய டிம் டேவிட் 20 பந்துகளில் 33 ரன்களில் எடுத்து அசத்த, இறுதியாக பிரெவிஸ் - டேவிய் வீசே கூட்டணி மும்பை அணியின் வெற்றியை உறுதி செய்தனர். இறுதியாக 19 ஒவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 162 ரன்கள் குவித்து வெற்றிபெற்றது. இதன் மூலம் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு மும்பை அணி முன்னேறியுள்ளது. இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.