மும்பை: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படுதோல்வி அடைந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு புதிய கேப்டன் மற்றும் புதிய விக்கெட் கீப்பர் தேவை எனக் கூறியிருக்கிறார் சுரேஷ் ரெய்னா. அதாவது, மறைமுகமாக தோனியை சிஎஸ்கே அணியை விட்டு வெளியேறுமாறு அவர் சூசகமாகச் சொல்லி இருக்கிறார். சுரேஷ் ரெய்னாவின் இந்த விமர்சனம் சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
2025 ஐபிஎல் தொடரின் 38வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து தட்டுத் தடுமாறி 176 ரன்கள் மட்டுமே எடுத்தது. எளிதாக 200 ரன்களை எட்டக்கூடிய வான்கடே மைதானத்தில் சிஎஸ்கே 176 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதை மும்பை இந்தியன்ஸ் அணி 15.4 ஓவர்களிலேயே சேசிங் செய்தது. சிஎஸ்கே அணி இந்த ஆண்டு இதுவரை விளையாடிய எட்டு போட்டிகளில் ஆறு தோல்விகளைச் சந்தித்து உள்ளது.

இந்த நிலையில், சுரேஷ் ரெய்னா சிஎஸ்கேவின் மோசமான ஆட்டம் குறித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். அவர் இது குறித்து பேசுகையில், "சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டும். அவர்களுக்கு புதிய கேப்டன் தேவை, புதிய விக்கெட் கீப்பர் தேவை. இந்த அணியை வழிநடத்தக் கூடிய ஒரு வீரரை விரைவாக அடையாளம் காணுங்கள்."
"அணியில் இருக்கும் முக்கிய வீரர்கள் பலரும் 30 வயதைத் தாண்டி விட்டார்கள். இளம் வீரர்கள் மீது முதலீடு செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது. மற்ற அணிகளைப் பாருங்கள். ப்ரியன்ஷ் ஆர்யா, வைபவ் சூர்யவன்ஷி போன்ற சில இளம் வீரர்கள் அனைவரையும் கவர்ந்துள்ளனர். ஆனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பாதை சரிவை சந்தித்துக் கொண்டு இருக்கிறது."
"இந்த அணியின் அச்சுறுத்தும் தவறுகளைப் பற்றி முடிவு எடுக்க வேண்டிய சரியான நேரம் இதுதான். கிரிக்கெட் இவர்களைத் தாண்டி எங்கேயோ சென்றுவிட்டது. இனி போட்டிகளை வெல்வதற்கு புதிய வழிகளை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும்" என்று கூறியிருக்கிறார் சுரேஷ் ரெய்னா.
சிஎஸ்கே அணிக்காகப் பல ஆண்டுகள் விளையாடிய சுரேஷ் ரெய்னா, அந்த அணிக்காக அதிக ரன்கள் குவித்த முன்னணி வீரராகவும் இருக்கிறார். சிஎஸ்கே விசுவாசியான அவரது இந்த விமர்சனம் சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
தோனியை சிஎஸ்கே அணியை விட்டு விலகுமாறு அவர் மறைமுகமாகச் சொல்லி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், இதுதான் நிதர்சனமான உண்மை. இதை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகமும் அந்த அணியின் ரசிகர்களும் புரிந்து கொள்வார்களா என்பதே இப்போது உள்ள கேள்வி.