மும்பை: மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிபெற வேண்டும் என சிஎஸ்கே ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து உள்ளனர். இந்த நிலையில், முன்னாள் சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னா அதிரடியான ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளார்.
இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கைதான் ஓங்கி இருக்கும் என அவர் அழுத்தம் திருத்தமாகக் கூறி, அதற்குப் பல்வேறு காரணங்களையும் பட்டியலிட்டுள்ளார். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடி இரண்டு வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி 7 போட்டிகளில் விளையாடி மூன்று வெற்றிகளைப் பெற்றிருக்கிறது.

இந்த நிலையில், இந்த போட்டி குறித்து சுரேஷ் ரெய்னா பேசுகையில், "மும்பை இந்தியன்ஸ் அணி மிகவும் பலமான அணியாக இருக்கிறது. சமீபத்தில் அவர்கள் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக ஒரு நல்ல போட்டியை வென்றிருந்தார்கள். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு எதிராக ட்ரென்ட் போல்ட் சிறப்பாகச் செயல்பட வாய்ப்பு உள்ளது. அவர் நல்ல லைனில் பந்து வீசுகிறார், மேலும் நல்ல யார்க்கர்களையும் வைத்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியின் திலக் வர்மா வேறு மாதிரியான ஃபார்மில் அதிரடி ஆட்டத்தை ஆடி வருகிறார். எனவே, இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணியின் கைதான் ஓங்கி இருக்கும். ஏனெனில், மும்பை அணியிடம் அதிக அதிரடி பேட்ஸ்மேன்கள் உள்ளனர்." என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய ரெய்னா, "இந்த போட்டி இரண்டு அணிகளுக்குமே முக்கியம். ஏனெனில், இங்கிருந்து இரண்டு அணிகளும் புள்ளிப் பட்டியலில் மேலே முன்னேறிச் செல்ல முயற்சிக்க வேண்டும். இது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிக மிக முக்கியமான போட்டி. ஏனெனில், மும்பை இந்தியன்ஸ் அணி சில வெற்றிகளுக்குப் பிறகு இந்த போட்டியில் விளையாட வருகிறது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றால் புள்ளிப் பட்டியல் மிகவும் சுவாரசியமாக மாறும்."
"நூர் அகமது போன்ற சுழற்பந்து வீச்சாளர்கள் எப்படி பந்து வீசுகிறார்கள் என்பதை நாம் மறக்கக் கூடாது. ஏனெனில், சூரியகுமார் யாதவ், திலக் வர்மா, ரோஹித் சர்மா ஆகியோர் ஸ்வீப் ஷாட்களை ஆடுவார்கள். எனவே, மிடில் ஓவர்களில் நூர் அகமது வீசும் ராங்-அன்கள் நழுவிச் செல்ல வாய்ப்பு உள்ளது. எனவே, அவருக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணி கவனமாக விளையாட வேண்டும்." என்று குறிப்பிட்டார்.
மேலும் ரெய்னா கூறுகையில், "எப்போது வான்கடே மைதானத்தில் விளையாடினாலும், டாஸ் இங்கு முக்கிய பங்கு வகிக்கும். முதல் ஆறு ஓவர்கள் பவர் பிளேவில் நன்றாக விளையாட வேண்டும். முதலில் விளையாடினாலும் சரி, அடுத்து விளையாடினாலும் சரி, பவர் பிளே முக்கியமானதாகும். பவர் பிளே ஓவரில் ஒரு விக்கெட் விழுந்தாலும் ஸ்கோர் 70 அல்லது 80, 90 ஆக இருக்க வேண்டும். எந்த அணி அப்போது அழுத்தத்தை சரியாகக் கையாள்கிறதோ, அதுதான் முக்கியம்."
"ஆனால், நான் சொன்னது போல, மும்பை இந்தியன்ஸ் அணியின் கை சிஎஸ்கேவை விட ஓங்கி இருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் போதிய ரன் குவிக்கும் நோக்கம் இல்லை. அவர்கள் பவர் பிளேவில் விக்கெட்டுகளை இழக்கிறார்கள், நிறைய டாட் பால்களை ஆடுகிறார்கள். நாம் குறைவான டாட் பால்களை ஆட வேண்டும் என்ற மனநிலைக்கு சிஎஸ்கே வர வேண்டும். ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்ய வேண்டும். முதல் ஆறு ஓவர்களில் அதிக ரன்களைக் குவிக்க முயற்சிக்க வேண்டும். அதன் பிறகு, ஏழாவது ஓவரிலிருந்து 14வது ஓவர் வரை போட்டி மாறும். எந்தப் பந்து வீச்சாளரை குறிவைத்து அடிக்கலாம் என நாம் யோசிக்கலாம்" என்று தெரிவித்தார்.
மும்பை இந்தியன்ஸ் அணியை சிஎஸ்கே வெல்ல வேண்டுமென்றால், அவர்கள் தங்களது மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்றும் சுரேஷ் ரெய்னா கூறினார்.