மும்பை: 2026 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தடுமாறி வரும் நிலையில், அந்த அணியின் 'தல' தோனி மீண்டும் களமிறங்குவாரா என்ற எதிர்பார்ப்பு கோடிக்கணக்கான ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இதுவரை ஒரு போட்டியில் கூட விளையாடாத தோனி, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ,முக்கிய போட்டியில் நிச்சயம் பங்கேற்பார் என இந்திய அணியின் சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் ரவிச்சந்திரன் அஸ்வின் 100 சதவீதம் உறுதியளித்துள்ளார். தோனியின் வருகை குறித்து அஸ்வின் வெளியிட்ட அந்த ஒரு ரகசியம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
நடப்பு ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணி தொடர் காயங்களாலும், சீரற்ற ஆட்டத்தாலும் தவித்து வருகிறது. காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காயம் காரணமாக தோனி இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கவில்லை. இந்நிலையில், தோனியின் தற்போதைய நிலை குறித்துப் பேசிய அஸ்வின், "நான் தோனியைப் பல ஆண்டுகளாகப் பார்த்து வருகிறேன். அவர் வலைப்பயிற்சியில் விக்கெட் கீப்பிங் கிளவுஸ்களை அணிந்து நான் பார்த்ததே இல்லை. பொதுவாக அவர் பேட்டிங் பயிற்சி மட்டுமே செய்வார். ஆனால் தற்போது அவர் வலைப்பயிற்சியில் தீவிரமாக கீப்பிங் பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறார்.

இதன் அர்த்தம் என்னவென்றால், அவர் மும்பைக்கு எதிரான போட்டியில் சஞ்சு சாம்சனுக்குப் பதிலாக விக்கெட் கீப்பராகக் களமிறங்கப் போகிறார் அல்லது இம்பாக்ட் வீரராக விளையாடப் போகிறார் என்பதுதான். அவர் முழு உடல் தகுதியுடன் இருக்கிறார் என்பதில் எனக்கு 100 சதவீதம் நிச்சயம் உள்ளது. அவர் இன்னும் குணமடையவில்லை என்றால் குனிந்து நிமிர்ந்து விக்கெட் கீப்பிங் பயிற்சியைச் செய்திருக்க மாட்டார்" எனத் தனது யூடியூப் சேனலில் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், சிஎஸ்கே அணியின் தற்போதைய பின்னடைவு குறித்தும் அஸ்வின் விளக்கியுள்ளார். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி கடைசி நேரத்தில் ரன் குவிக்க முடியாமல் தடுமாறியதை நினைவு கூர்ந்த அவர், "கடைசி 5 பந்துகளில் 15 ரன்கள் தேவைப்படும் போது தோனி போன்ற ஒரு பினிஷர் தான் சிஎஸ்கேவுக்கு அவசியம். அவர் களத்தில் இருந்தாலே எதிரணிக்கு ஒரு பயம் இருக்கும். தோனி விளையாட வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால், அவரை யாரால் தடுக்க முடியும்? அவர் பயிற்சியில் ஓடுவதையும் பேட்டிங் செய்வதையும் பார்க்கும் போது அவர் முழுமையாக மீண்டுவிட்டது தெரிகிறது" என்று கூறியுள்ளார்.

இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் 2 வெற்றிகளுடன் வெறும் 4 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ள சிஎஸ்கே அணி, புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் மிகவும் பின்தங்கியுள்ளது. அணியில் ஆயுஷ் மாத்ரே போன்ற முக்கிய வீரர்கள் காயத்தால் விலகியுள்ள நிலையில், தோனியின் வருகை அணிக்கு மிகப்பெரிய உத்வேகத்தைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வியாழக்கிழமை மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த பிரம்மாண்ட மோதலில் தோனி களமிறங்குவது உறுதியானால், அது சிஎஸ்கே ரசிகர்களுக்கு இந்த ஆண்டின் மிகப்பெரிய பரிசாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.