மும்பை: 2025 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வி அடைந்தது. அதன் பிறகு போட்டி முடிந்தவுடன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி அம்பயருடன் கோபமாகப் பேசிய வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.
எப்போதும் தோனி அமைதியாக இருப்பவர் என்ற பிம்பம் இருக்கும் நிலையில், அதை உடைக்கும் வகையில் நேற்று போட்டி முடிந்தவுடன் அவர் அம்பயருடன் வாதம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், அம்பயர் சிஎஸ்கே அணியை ஏமாற்றினாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

என்னதான் சிஎஸ்கே அணி இந்தப் போட்டியில் மோசமாக விளையாடி இருந்தாலும், அம்பயர் பந்தை மாற்ற ஒப்புக் கொள்ளாதது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணி இரண்டாவதாகப் பந்து வீசியது. அப்போது, பந்தை மாற்ற வேண்டும் என சிஎஸ்கே அணி சார்பில் கேப்டன் தோனி கோரிக்கை வைத்தார். ஆனால், அதை அம்பயர் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால்தான் போட்டி முடிந்தவுடன் அது பற்றி தோனி கோபமாக பேசினார் எனக் கூறப்படுகிறது.
இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது. அடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்தது. அப்போது காற்றில் ஈரப்பதம் இருந்ததால், சிஎஸ்கே அணியின் பந்துவீச்சாளர்கள் சொதப்பலாகப் பந்து வீசி வந்தனர்.
ஒரு கட்டத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் தோனி பந்தில் இருக்கும் ஒரு குறையை அம்பயரிடம் சுட்டிக்காட்டி பந்தை மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தனர். பந்தில் குறிப்பிட்ட இடத்தை பலமுறை அஸ்வினும், தோனியும் அம்பயரிடம் சுட்டிக்காட்டி சேதம் அடைந்து இருப்பதாக கூறினர். அதனால் பந்தை மாற்றுமாறு கோரிக்கை வைத்தனர்.
ஆனால், அம்பயர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. பந்து நன்றாக இருப்பதாக அவர் கூறினார். இதையடுத்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதே பந்துடன் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டது. பின்னர் மும்பை இந்தியன்ஸ் அணி 15.4 ஓவர்களில் எல்லாம் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. ரோஹித் சர்மா 45 பந்துகளில் 76 ரன்கள் சேர்த்தார்; சூரியகுமார் யாதவ் 30 பந்துகளில் 68 ரன்கள் சேர்த்தார்.
போட்டி முடிந்தவுடன் தோனி அம்பயரிடம் நேராகச் சென்று, பந்தை மாற்றாதது பற்றித் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். அம்பயரும் அதற்கு பதிலளித்து தோனியை அனுப்பி வைத்தார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.