மும்பை : 2024 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் படுமோசமாக ஆடி ஒன்பது போட்டிகளில் ஆறு தோல்விகளை பெற்றுள்ளது. ஐபிஎல் கோப்பை வென்று கொடுப்பார் என்ற நம்பிக்கையில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து வரவழைக்கப்பட்ட ஹர்திக் பாண்டியா கேப்டனாக படுமோசமாக செயல்பட்டு இருக்கிறார்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ரோஹித் சர்மா டி20 பேட்டிங்கில் ஃபார்ம் இழந்ததால் இனியும் கேப்டனாக அவரை வைத்திருப்பதில் எந்த பயனும் இல்லை எனக் கருதிய மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர்களான அம்பானி குடும்பம் அவரை நீக்க முடிவு செய்தது.

அவருக்கு பதிலாக அடுத்த இந்திய டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட இருப்பதாக கிசுகிசுக்கப்பட்ட ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமிக்க அந்த அணி முடிவு செய்தது. ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து பிரிந்து சென்று குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இரண்டு சீசன்களில் ஒரு முறை கோப்பை வென்று கொடுத்ததோடு, மற்றொரு முறை ஐபிஎல் இறுதிப் போட்டி வரை அணியை அழைத்து சென்று இருந்தார்.
இந்த காரணங்களால் ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக் பாண்டியாவை தங்கள் அணியின் கேப்டனாக நியமித்தது. அவரை நம்பி அனுபவம் வாய்ந்த ரோஹித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது. ஹர்திக் பாண்டியா கேப்டன் ஆகி விட்டதால் 2024 ஐபிஎல் தொடரில் மும்பை அணி கோப்பை வென்று விடும் என்றே மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் நம்பியது.
ஆனால், தற்போது ஒன்பது போட்டிகளில் மூன்று வெற்றிகள் மட்டுமே பெற்று கிட்டத்தட்ட பிளே-ஆஃப் செல்லும் வாய்ப்பை இழக்கும் தருவாயில் உள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சியால் தான் குஜராத் டைட்டன்ஸ் அணி இரண்டு ஆண்டுகளாக அந்த அணி தொடர்ந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறி ஒரு முறை கோப்பையையும் கைப்பற்றியதாக தப்புக் கணக்கு போட்டது.
ஆனால் உண்மையில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா தான் அந்த வெற்றிகளில் பெரும் பங்கு வகித்து இருக்கிறார் என்பது தற்போது உறுதியாகி இருக்கிறது.