மும்பை: இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டனாக சுப்மன் கில் தேர்வு செய்யப்பட வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதுவரை 32 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சுப்மன் கில், இதுவரை வெளிநாட்டு மண்ணில் ஒரேயொரு இன்னிங்ஸில் மட்டுமே சிறப்பாக விளையாடி இருக்கிறார். இதனால் டெஸ்ட் கேப்டன் பதவிக்கு சுப்மன் கில் சரிபட்டு வர மாட்டார் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ஐபிஎல் தொடரில் குஜராத் அணியின் கேப்டனாக சுப்மன் கில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவரது தலைமையில் குஜராத் அணி 10 போட்டிகளில் 7 வெற்றி, 3 தோல்வி உட்பட 14 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. இன்னும் ஒரு போட்டியில் வென்றால் கூட குஜராத் அணியால் எளிதாக பிளே ஆஃப் சுற்றுக்குள் ஒரு காலினை எடுத்து வைக்க முடியும்.

கேப்டன் பதவி அளிக்கப்பட்டாலும், சுப்மன் கில்லின் பேட்டிங்கில் எந்த சிக்கலும் ஏற்படவில்லை. 10 இன்னிங்ஸில் விளையாடியுள்ள சுப்மன் கில் 5 அரைசதங்கள் உட்பட 465 ரன்களை விளாசி இருக்கிறார். ஏற்கனவே இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் துணைக் கேப்டனாக சுப்மன் கில் செயல்பட்டு வருகிறார். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கூட ரோஹித் சர்மாவுடன் சுப்மன் கில் இணைந்து பணியாற்றினார்.
ஐபிஎல் தொடரிலும் சுப்மன் கில் சாதித்து வருவதால், அவர் கையில் இந்திய டெஸ்ட் கேப்டன்சியை அளிக்க பிசிசிஐ முடிவு எடுத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி ஜூன் மாதம் பங்கேற்க உள்ளது. ரோஹித் சர்மாவுக்கு 38 வயதாகிவிட்டதால், அவரை மீண்டும் கேப்டனாக அழைத்து செல்ல பிசிசிஐ விரும்பவில்லை.
பும்ரா அடிக்கடி காயம் அடைவதால், இளம் வீரர் ஒருவரை தேர்வு செய்ய பிசிசிஐ முடிவு எடுத்துள்ளது. இதனிடையே விராட் கோலியின் டெஸ்ட் கேப்டன்சிக்கு ஆர்வம் காட்டியதாக பார்க்கப்படுகிறது. ஆனால் சீனியர் வீரரை நியமனம் செய்வதை விடவும், இளம் வீரர்களை தயார் செய்வதிலேயே பிசிசிஐ விருப்பம் காட்டி வருகிறது. இளம் வீரர்களில் சுப்மன் கில் மட்டுமே 32 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் விளையாடி இருக்கிறார்.
ஆனால் சுப்மன் கில் என்னதான் 32 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருந்தாலும் கூட, இதுவரை ஒரு இன்னிங்ஸை எப்படி கட்டமைக்க வேண்டும் என்பதில் தடுமாறி வருகிறார். எளிதாக ஒவ்வொரு இன்னிங்ஸிலும் 20 ரன்களுக்கு மேல் எடுத்துவிடும் சுப்மன் கில், எந்த நேரத்தில் ஆட்டமிழப்பார் என்பதை யாராலும் கணிக்க முடியாது.
அதேபோல் சுப்மன் கில் இதுநாள் வரை இந்திய மண்ணில் மட்டுமே நன்றாக விளையாடி வருகிறார். வெளிநாட்டு மைதானங்களில் சுப்மன் கில் ஒரேயொரு இன்னிங்ஸில் மட்டுமே சிறப்பாக விளையாடி இருக்கிறார். அதுவும் அறிமுக டெஸ்ட் தொடரில் மட்டும்தான். நம்பர் 3ல் தன்னால் சிறப்பாக விளையாட முடியும் என்று கேட்டு வாங்கிய சுப்மன் கில், இதுவரை அதற்கான நியாயத்தை செய்யவே இல்லை.
ஆஸ்திரேலியா, டெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா, வங்கதேசம், இலங்கை என்று எங்குமே சுப்மன் கில் ரன்களை சேர்க்கவில்லை. அதேபோல் டெஸ்ட் கிரிக்கெட்டில் துணைக் கேப்டனாக கூட இந்திய அணியை ஒருமுறை கூட வழிநடத்தியதில்லை. இதனால் இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன்சிக்கு சுப்மன் கில் சரிபட்டு வரமாட்டார் என்று ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.