சிஎஸ்கே பங்காளியை பொளந்து கட்டிய மும்பை கேப்டவுன்.. 14 சிக்ஸ், 19 ஃபோர்ஸ்.. பரிதாப நிலையில் ஜேஎஸ்கே!
ஜொகன்னஸ்பர்க்: ஜேஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் மும்பை கேப்டவுன் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 243 ரன்கள் குவித்துள்ளது.
உலகின் எந்த பகுதியில் சென்னை - மும்பை அணிகள் விளையாடினாலும் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. அந்த வகையில் எஸ்ஏ20 லீக் தொடரின் இன்றைய ஆட்டத்தில் ஜேஎஸ்கே அணியை எதிர்த்து மும்பை கேப் டவுன் அணி களமிறங்கியுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜேஎஸ்கே அணி கேப்டன் டூ பிளசிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து வான் டர் டூசன் - ரிக்கல்டன் கூட்டணி தொடக்கம் கொடுத்தது.

முதல் 2 ஓவர்கள் நிதானம் காட்டிய மும்பை கேப்டவுன் அணி பேட்ஸ்மேன்கள், அதன்பின் அதிரடிக்கு திரும்பினர். அதிலும் பர்கர் வீசிய 4வது ஓவரில் மட்டும் 3 சிக்ஸ், 2 பவுண்டரி உட்பட 27 ரன்கள் விளாசப்பட்டது. தொடர்ந்து சிக்சரும், பவுண்டரியுமாய் விளாசி வான் டர் டூசன் 26 பந்துகளில் அரைசதம் கடந்தார். இதனால் 9 ஓவர்களிலேயே ஜேஎஸ்கே அணி விக்கெட் இழப்பின்றி 107 ரன்கள் சேர்த்தது.
தொடர்ந்து ரிக்கல்டன் 27 பந்துகளில் அரைசதம் அடிக்க, இவர்கள் இருவரையும் கட்டுப்படுத்த முடியாமல் ஜேஎஸ்கே பவுலர்கள் திணறினர். ஒவ்வொரு ஓவருக்கும் குறைந்தபட்சம் 15 ரன்களாவது அடிக்க வேண்டும் என்று இருவரும் பொளந்து கட்டினார்கள். இதனால் வெறும் 46 பந்துகளில் வான் டர் டூசன் சதம் விளாச, 15.2 ஓவர்களில் 200 ரன்கள் எட்டப்பட்டது.
அதன்பின் வான் டர் டூசன் 104 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த பிரெவிஸ் 5 ரன்களிலும், லிவிங்ஸ்டன் 12 ரன்களிலும் அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இருப்பினும் மறுமுனையில் நின்றிருந்த ரிக்கல்டன் சதம் விளாசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரும் 98 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசி நேரத்தில் ஜேஎஸ்கே அணி பவுலர்கள் கம்பேக் கொடுத்தனர்.
இதனால் மும்பை கேப் டவுன் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 243 ரன்களை குவித்துள்ளது. எஸ்ஏ20 லீக் தொடரில் அடிக்கப்பட்ட இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். மேலும் ஜேஎஸ்கே அணியின் பர்கர் வீசிய 4 ஓவர்களில் 53 ரன்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.


Click it and Unblock the Notifications