மும்பை : மும்பை இந்தியன்ஸ் பணியை பற்றி ரோஹித் சர்மா பேசிய சர்ச்சை வீடியோவை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டது. ஒலிப்பதிவு தெளிவாக இல்லாத அந்த வீடியோவில் அவர் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து விலகுவதாகவும் பேசியிருக்கிறார். இது ரோஹித் சர்மா ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.
இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மீது கடும் கோபத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த இரு அணிகளும் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கும் போட்டியில் ஆட உள்ளன. அதற்காக இரு அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளர்களில் ஒருவரான அபிஷேக் நாயருடன், ரோஹித் சர்மா பேசிக் கொண்டிருந்தார். அபிஷேக் நாயர் முன்னாள் மும்பை இந்தியன்ஸ் வீரர் ஆவார். அவரிடம் ரோஹித் சர்மா பேசுகையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் பெயரை சொல்லாமல், "அதை என் வீடாகத்தான் பார்க்கிறேன். நான் கோவிலாக மாற்றினேன். ஆனால் எல்லாமே மாறிக் கொண்டிருக்கிறது. இதுதான் எனக்கு கடைசி" என அவர் பேசியது பதிவாகி இருந்தது. அவர் முழுமையாக என்ன பேசினார் என்பது தெரியாத நிலையில் ரசிகர்கள் பலரும் அவர் மும்பை இந்தியன்ஸ் அணியை பற்றி தான் பேசுகிறார் என கூறி வருகின்றனர்.
மும்பை இந்தியன்ஸ் அணியை தான் கோவிலாக மாற்றியதாகவும், ஆனால் அங்கு எல்லாமே மாறிவிட்டது என்பதால் இந்த ஆண்டுடன் தான் விலகப் போவதாகவும் ரோஹித் சர்மா பேசியதாக சொல்லப்படுகிறது. இந்த வீடியோவை வெளியிட்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அடுத்த சில நிமிடங்களில் நீக்கிவிட்டது. இதில் இருந்தே ரோஹித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியை பற்றித் தான் பேசி இருக்கிறார் என புரிந்து கொண்ட ரசிகர்கள் நீக்கப்பட்ட வீடியோவை பதிவு செய்து மீண்டும் பரப்பி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த வீடியோவால் மும்பை இந்தியன்ஸ் அணிக்குள் புகைச்சல் எழ வாய்ப்பு உள்ளதால் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் கொந்தளிப்பில் உள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தேவையின்றி ரோஹித் சர்மா ரசிகர்களை சீண்டி விட்டுள்ளதாக அந்த அணி கருதுகிறது. ஏற்கனவே, ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்ததால் ரோஹித் சர்மா ரசிகர்கள் அதிருப்தியில் இருக்கும் நிலையில் இந்த வீடியோவால் பல ரசிகர்கள் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக மாறக் கூடும்.