மும்பை: 2026 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த நிலையில், இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவை மும்பை அணி 'இம்பாக்ட் பிளேயராக' அறிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.
சமீபத்தில் இந்திய அணிக்கு டி20 உலகக்கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் சூர்யகுமார் யாதவ், அணி ஃபீல்டிங் செய்யும்போது ஆடுகளத்தில் செய்யக்கூடாது என்பதற்காகவே மும்பை நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளதாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். சூர்யகுமார் யாதவை பேட்டிங்கில் மட்டும் பயன்படுத்திவிட்டு, ஃபீல்டிங்கின் போது வெளியே அமர வைப்பது அவரை அவமதிக்கும் செயல் என சமூக வலைதளங்களில் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.

மும்பை இந்தியன்ஸ் அணியில் கடந்த 2 ஆண்டுகளாகவே கேப்டன் பதவி பெரும் சர்ச்சைக்குரிய ஒன்றாக உள்ளது. 2024 ஐபிஎல் தொடரின் போது, 10 ஆண்டுகள் அணியை வழிநடத்திய ரோஹித் சர்மாவை நீக்கிவிட்டு ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்திய அணிக்கு உலகக்கோப்பையை வென்று கொடுத்த இரண்டு கேப்டன்களான ரோஹித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர், தற்போது ஹர்திக் பாண்டியாவின் தலைமையின் கீழ் விளையாடி வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக ரோஹித் சர்மா இம்பாக்ட் வீரராகப் பயன்படுத்தப்பட்ட நிலையில், தற்போது சூர்யகுமார் யாதவும் அதே நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
சூர்யகுமார் யாதவ் மைதானத்தில் இருந்தால், சூழ்நிலைக்கு ஏற்ப அவர் வழங்கும் ஆலோசனைகள் கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தக்கூடும் என்று ஒரு தரப்பு ரசிகர்கள் கருதுகின்றனர். தன்னை விட செல்வாக்குமிக்க வீரர்கள் ஆடுகளத்தில் இருப்பதை ஹர்திக் பாண்டியா விரும்பவில்லை என்றும், அதன் காரணமாகவே சூர்யகுமார் யாதவ் வெளியே அமர வைக்கப்பட்டுள்ளார் என்றும் ஊகங்கள் கிளம்பியுள்ளன.

இதற்கிடையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. இம்பாக்ட் வீரர் விதியை மும்பை இந்தியன்ஸ் அணி கையாளும் விதம் அந்த அணியின் ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.