மும்பை: 2026 ஐபிஎல் தொடரின் இரண்டாவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். ஆனால், கொல்கத்தா பேட்ஸ்மேன்கள் ஆரம்பம் முதலே அதிரடி காட்டி மும்பை பந்துவீச்சை நிலைகுலையச் செய்தனர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கொல்கத்தா அணி 4 விக்கெட் இழப்புக்கு 220 ரன்கள் குவித்து மலைக்க வைத்தது.
கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் அஜின்கியா ரஹானே மற்றும் ஃபின் ஆலன் களம் இறங்கினர். ஆரம்பம் முதலே இருவரும் பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்கவிட்டனர். ஃபின் ஆலன் வெறும் 17 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். இவர்களின் அதிரடியால் பவர் பிளே ஓவர்களில் கொல்கத்தா அணி 78 ரன்கள் குவித்து வலுவான அடித்தளம் அமைத்தது.

ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்தாலும், மறுபுறம் கேப்டன் ரஹானே நங்கூரம் போல நிலைத்து நின்று விளையாடினார். அவர் 40 பந்துகளில் 67 ரன்கள் எடுத்து அணிக்குத் தேவையான ரன் ரேட்டை உயர்த்தினார். இதில் 5 மெகா சிக்ஸர்கள் அடங்கும். அவருக்குப் பின் வந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் அங்க்ரிஷ் ரகுவன்ஷி, தனது அதிரடியால் மும்பை மைதானத்தை அதிர வைத்தார். 29 பந்துகளைச் சந்தித்த அவர், 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 51 ரன்கள் குவித்து அசத்தினார்.
கடைசி கட்டத்தில் பினிஷர் ரிங்கு சிங் 21 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். கேமரூன் கிரீன் 18 ரன்களும், ரமன்தீப் சிங் 4 ரன்களும் சேர்த்தனர். மும்பை தரப்பில் ஷர்துல் தாகூர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினாலும், 4 ஓவர்களில் 39 ரன்களை விட்டுக்கொடுத்தார். நட்சத்திர வீரர் ஜஸ்பிரித் பும்ரா விக்கெட் ஏதும் எடுக்காமல் 35 ரன்களை வழங்கினார். ஹர்திக் பாண்டியா 3 ஓவர்களில் 39 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். மயங்க் மார்க்கண்டே வீசிய ஒரே ஓவரில் 16 ரன்கள் எடுக்கப்பட்டது.

வான்கடே மைதானம் பேட்டிங்கிற்குச் சாதகமாக இருந்ததைப் பயன்படுத்திக் கொண்ட கொல்கத்தா வீரர்கள், சிக்ஸர் மழையைப் பொழிந்தனர். 221 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களம் இறங்கியது. மும்பை மண்ணிலேயே கொல்கத்தா அணி 220 ரன்கள் குவித்தது அந்த அணியின் ரசிகர்களுக்குப் பெரும் உற்சாகத்தை அளித்தது. கேப்டன் ரஹானே முன்னின்று அணியை வழிநடத்திய விதம் அனைவரின் பாராட்டையும் பெற்றது.