மும்பை : 2024 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் கொல்கத்தா அணி நான்கு விக்கெட்களை இழந்து தடுமாறிய போது ரிங்கு சிங் களத்துக்கு வந்தார்.
அவர் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெறாத நிலையில் இந்தப் போட்டியில் அதிக ரன்கள் குவித்து தன்னை அணியில் தேர்வு செய்யாததை கேள்வி கேட்கும் வகையில் செயல்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் மீது நம்பிக்கை வைத்து காத்திருந்த அனைவருக்கும் ஏமாற்றமே மிஞ்சியது.

இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் துவக்க வீரர் ஃபில் சால்ட் ஐந்து ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து ரகுவன்ஷி 13 ரன்களிலும், சுனில் நரைன் 8 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர்.
அடுத்து வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஆறு ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். 28 ரன்களுக்கு மூன்று விக்கெட்களை இழந்து இருந்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. அப்போது ரிங்கு சிங் ஆடுகளத்துக்கு வந்தார். அவர் இரண்டு பவுண்டர் அடித்தார். ஆனால், 8 பந்துகளில் 9 ரன்கள் மட்டுமே எடுத்து பியுஷ் சாவ்லா பந்து வீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அவர் அந்த பந்தை அவசரப்பட்டு அடித்து இருந்தார். இதை அடுத்து ரிங்கு சிங் தலை குனிந்தபடி ஆடுகளத்தை விட்டு வெளியேறினார். அடுத்தடுத்து விக்கெட்கள் விழுந்ததை பார்த்த கொல்கத்தா அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீர் உறைந்து போயிருந்தார்.
இந்த போட்டியில் கொல்கத்தா அணியில் வெங்கடேஷ் மட்டுமே சிறப்பாக பேட்டிங் செய்தார். அவர் 52 பந்துகளில் 70 ரன்கள் சேர்த்தார். இம்பேக்ட் வீரராக களம் இறக்கப்பட்ட மணிஷ் பாண்டே 42 ரன்கள் சேர்த்திருந்தார். அதன் பின் வந்த வீரர்கள் சொற்ப ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்களை பறிகொடுத்தனர். 19.5 ஓவர்களில் 169 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.
இந்திய டி20 அணியில் இடம் பெறாத நிலையில் ரிங்கு சிங் இந்த போட்டியில் அதிக ரன்கள் குவித்து இருந்தால், அது பிசிசிஐக்கு அழுத்தத்தை ஏற்படுத்தி இருக்கும். தற்போது மாற்று வீரராக இருக்கும் ரிங்கு சிங் உலகக் கோப்பை தொடரின் இடையே அணியில் இடம் பெறும் வாய்ப்பை ஏற்படுத்தி இருக்கும். ஆனால் ரிங்கு சிங் தனக்கு கிடைத்த நல்ல வாய்ப்பை தவற விட்டு விட்டார். இனி வரும் போட்டிகளிலாவது அதிரடியாக ரன் குவிக்க வேண்டும்.