மும்பை: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். வான்கடே மைதானத்தில் சேஸிங் செய்வது எளிது என்பதால், லக்னோ அணி இந்த முடிவை எடுத்துள்ளது. லக்னோ அணி தரப்பில் ஷர்துல் தாக்கூர் நீக்கப்பட்டு மயங்க் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் தொடரின் 45வது லீக் போட்டியில் மும்பை அணியை எதிர்த்து லக்னோ அணி களமிறங்கியுள்ளது. மும்பை அணி தொடர்ச்சியாக வெற்றிகளை பெற்று வரும் நிலையில், லக்னோ அணி வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் வான்கடே மைதானத்தில் தொடங்கியுள்ள போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.

இதன்பின் லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பேசுகையில், நாங்கள் பவுலிங்கை தேர்வு செய்துள்ளோம். பகல் நேரத்தில் நடக்கும் போட்டிகளில் பிட்சை பயன்படுத்தி கொள்ள வேண்டும். சிறந்த கிரிக்கெட்டை விளையாட வேண்டுமென்றால், ஒவ்வொரு நாளையும் புதிய நாளாக தொடங்க வேண்டும். எங்கள் அணியில் ஷர்துல் தாக்கூர் நீக்கப்பட்டு, மயங்க் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேசுகையில், நாங்களும் பவுலிங் செய்யவே விரும்பினோம். ஆனால் வெயில் காரணமாக முதல் பேட்டிங் பற்றியும் கவலையில்லை. இந்த வெயிலுக்கு மட்டும் வீரர்கள் தகவமைத்து கொள்ள வேண்டும். இங்கு வந்துள்ள குழந்தைகளுக்கு சிறந்த கிரிக்கெட்டை காட்ட வேண்டும்.
ஐபிஎல் தொடரில் தொடர்ந்து வெற்றி பெறும் போது, அந்த தருணம் தொடரும். அதனால் தொடர்ந்து சரியான மாற்றங்களை செய்து கொண்டே இருக்க வேண்டும். சான்ட்னர், புத்தூர் ஆகியோருக்கு பதிலாக கார்பின் போஸ்ச், கரண் சர்மா சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.