மும்பை: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் வெறும் 4 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறி இருக்கிறார். ஐபிஎல் மெகா ஏலத்தில் ரூ.27 கோடிக்கு வாங்கப்பட்ட ரிஷப் பண்ட், இந்த சீசனில் மட்டும் 6 முறையாக ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்து புதிய வரலாறு படைத்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் மும்பை அணியை எதிர்த்து லக்னோ அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 215 ரன்களை குவித்தது. அதிரடியாக ஆடிய ரிக்கல்டன் மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவருமே அரைசதம் விளாசி அசத்தினர். இதன்பின் லக்னோ அணி 216 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கியது.

மிட்சல் மார்ஷ் - மார்க்ரம் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் மார்க்ரம் 11 பந்துகளில் 9 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, பின்னர் மார்ஷ் - நிக்கோலக்ஸ் பூரன் கூட்டணி அதிரடியாக ரன்களை குவித்தது. ஆனால் பூரன் சிக்ஸ் அடிக்க முயற்சித்து 27 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன்பின் லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் களத்திற்கு வந்தார்.
இந்த சீசனில் ரிஷப் பண்ட் மோசமான ஃபார்மில் இருந்து வருகிறார். இதனால் வான்கடே மைதானத்திலாவது ரிஷப் பண்ட் ரன்கள் அடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. வில் ஜாக்ஸ் வீசிய பந்தில் பவுண்டரியுடன் தொடங்கிய ரிஷப் பண்ட், அடுத்த பந்திலேயே ரிவர்ஸ் ஸ்வீப் ஆடி விக்கெட்டை பறிகொடுத்தார். முதல் பந்திலேயே ரிஷப் பண்ட் ஸ்லிப் திசையில் தான் பவுண்டரி அடித்திருந்தார்.
அதனை பார்த்து உடனடியாக வில் ஜாக்ஸ் ஸ்லிப்பில் ஃபீல்டரை கொண்டு வந்தார். இந்த சம்பவம் ரிஷப் பண்ட் கண் முன்பாக நடைபெற்றது. இதனை பார்த்தும் ரிஷப் பண்ட் ரிவர்ஸ் ஸ்வீப் விளையாடி 4 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறி இருக்கிறார். இந்த சீசனில் 10 இன்னிங்ஸில் விளையாடி ரிஷப் பண்ட் வெறும் 110 ரன்களை மட்டுமே சேர்த்திருக்கிறார்.
அதேபோல் 6 முறை ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்து வெளியேறி இருக்கிறார். ஐபிஎல் மெகா ஏலத்தில் ரூ.27 கோடிக்கு லக்னோ அணி நிர்வாகம் ரிஷப் பண்ட்-ஐ வாங்கியது. இதனால் சஞ்சீவ் கொயங்காவிடம் ரிஷப் பண்ட் மாட்டிக் கொண்டதாக ரசிகர்கள் கூறி வந்தனர். ஆனால் ரிஷப் பண்ட் ஆட்டத்தை பார்க்கும் போது, சஞ்சீவ் கொயங்கா தான் மாட்டிக் கொண்டார் என்று ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.