மும்பை: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் மற்றும் அந்த அணிக்கு ஐபிஎல் நிர்வாகம் தண்டனை அளித்துள்ளது. இந்த ஆண்டு இரண்டாவது முறையாக தவறு செய்ததால், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அனைத்து வீரர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. என்ன தவறு நடந்தது?
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி விளையாடியது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 7 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் எடுத்தது.

மும்பை இந்தியன்ஸ் அணி ரன் குவிப்பதை தடுப்பதற்காக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் நீண்ட நேரம் எடுத்துக் கொண்டார். ஃபீல்டிங் அமைப்பதற்காகவும், பந்துவீச்சாளர்களுடன் அவ்வப்போது ஆலோசனை செய்வதற்காகவும் அவர் நேரத்தை எடுத்துக் கொண்டார். அதனால் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் 20 ஓவர்களையும் வீசி முடிக்க முடியவில்லை.
ஏற்கனவே, இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஸ்லோ ஓவர் ரேட் தவறை செய்திருந்தது. அப்போது அந்த அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்டுக்கு மட்டும் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. தற்போது இரண்டாவது முறையாக அதே தவறு நடந்துள்ளதால், ரிஷப் பண்ட் மற்றும் அந்த அணியின் அனைத்து வீரர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கேப்டனான ரிஷப் பண்ட்டுக்கு 24 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. மற்ற வீரர்களுக்கு 6 லட்சம் ரூபாய் அல்லது 25% சம்பளம் ஆகியவற்றில் எது குறைவோ அது அபராதமாக விதிக்கப்பட்டிருக்கிறது.
இந்தப் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 161 ரன்கள் மட்டுமே எடுத்தது. மேலும் இந்தப் போட்டியில் 54 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. போட்டியில் தோல்வி அடைந்ததால் ரிஷப் பண்ட் அழுத்தத்திற்கு ஆளான நிலையில், அணியின் ஸ்லோ ஓவர் ரேட் காரணமாக அவருக்கும் அணிக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.
ஒரே நேரத்தில் இரண்டு பின்னடைவை எதிர்கொண்டுள்ளார் ரிஷப் பண்ட். அவரது பேட்டிங்கும் மோசமாக இருப்பதால் அவர் விமர்சனத்தை சந்தித்து வருகிறார். லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 10 போட்டிகளில் ஐந்து வெற்றிகள் மற்றும் ஐந்து தோல்விகளுடன் தற்போது புள்ளிப் பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது.