மும்பை: லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கொயங்கா கிரிக்கெட் தொடர்பான முடிவுகளில் தலையிட மாட்டார் என்று அந்த அணியின் நட்சத்திர வீரர் நிக்கோலஸ் பூரன் தெரிவித்துள்ளார். லக்னோ அணியின் வீரர்களுக்கு சஞ்சீவ் கொயங்கா அனைத்து வகையிலும் ஆதரவாக இருப்பதாக கூறிய பூரன், ரிஷப் பண்ட் உடன் தனக்கு தொடக்க காலம் முதலே நட்பு இருப்பதாகவும் கூறியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் இன்று நடக்கும் ஆட்டத்தில் மும்பை அணியை எதிர்த்து லக்னோ அணி விளையாடவுள்ளது. மும்பை அணிக்கு எதிராக விளையாடிய பெரும்பாலான போட்டிகளில் லக்னோ அணி வென்றுள்ள நிலையில், அந்த ஆதிக்கத்தை தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் மும்பை அணியின் அபார ஃபார்ம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல் லக்னோ அணி டெல்லி அணிக்கு எதிராக தோல்வியை சந்தித்திருக்கிறது. குறிப்பாக டெல்லி அணியின் கேஎல் ராகுல் தனி வீரராக களத்தில் நின்று லக்னோ அணியை வீழ்த்தி காட்டி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கொயங்கா பேச வந்தபோது கூட, கேஎல் ராகுல் கைகுலுக்கிவிட்டு உடனடியாக நகர்ந்து சென்றார்.
இதனால் ரசிகர்கள் முன்னிலையில் லக்னோ அணி மற்றும் லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கொயங்கா மீதான பார்வை இன்னும் மாறவில்லை என்று பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கொயங்கா தொடர்பாக நட்சத்திர வீரர் நிக்கோலஸ் பூரன் பேசுகையில், தனது அணிக்கு ஆதரவளிப்பதில் சஞ்சீவ் கொயங்கா முன்னிலையில் இருப்பார்.
கிரிக்கெட் தொடர்பான முடிவுகளில் ஒருபோதும் தலையிட்டதில்லை. இதுவரை அதனை நன்றாகவே உணர்ந்துள்ளேன். அதேபோல் லக்னோ அணியால் வாங்கப்பட்ட எந்த வீரருக்கும் போதுமான வாய்ப்புகளை வழங்க தவறியதில்லை. அனைத்து வகையிலும் ஆதரவாக இருப்பார். அது எங்கள் அணியிலும் நல்ல தாக்கத்தை கொடுத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கேப்டன் ரிஷப் பண்ட் குறித்து பூரன் பேசுகையில், என் வாழ்க்கையிலும் ஒரு கொடூரமான விபத்தை சந்தித்துள்ளேன். ரிஷப் பண்ட்-ம் அப்படியான விபத்தில் இருந்து மீண்டு வந்துள்ளார். தொடக்க காலம் முதலே ரிஷப் பண்ட்-க்கும் எனக்கும் இடையிலான நட்பு இருக்கிறது. தொடர்ந்து ஆலோசனை நடத்தி கொண்டே இருப்போம். அவர் எப்போது வெஸ்ட் இண்டீஸ் வந்தாலும், உடனடியாக சந்திப்போம்.
அதேபோல் நான் இந்தியா வந்தாலும், ரிஷப் பண்ட் உடனடியாக சந்திப்பார். எங்களின் வாழ்க்கையில் பயணத்தில் ஏற்பட்ட விபத்து மிகவும் மோசமானது. ஆனாலும் இன்று இருவருமே கிரிக்கெட் விளையாடி வருகிறோம். எங்களின் அனுபவங்களை நாங்கள் பகிர்ந்து கொண்டு, அடுத்த கட்டத்திற்கு முன்னேற உதவியாக இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.