MI vs PBKS: இந்த தோல்வியை ஏற்று கொள்ளவே முடியவில்லை.. பிளே ஆப் கடினமாகி விட்டது.. கேப்டன் ஸ்ரேயாஸ்
மும்பை: ஐபிஎல் 2026 சீசனில் வலுவாகக் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ், தொடர் தோல்விகளால் தடுமாறுகிறது. தொடர்ந்து ஐந்து போட்டிகளில் தோற்றதால் பிளேஆஃப் வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது. புள்ளிப் பட்டியலில் நான்காவதாக இருக்கும் பஞ்சாப் அணி, எஞ்சிய இரு போட்டிகளிலும் வென்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும்.
சமீபத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நடந்த ஆட்டத்தில், பஞ்சாப் நிர்ணயித்த இலக்கை மும்பை ஒரு பந்து மீதமிருக்க வென்றது. கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட, மும்பை அணியினர் மூன்று சிக்ஸர்களை விளாசி வெற்றியை ஈட்டினர். இந்த தோல்வி பஞ்சாப் அணிக்குப் பெரும் பின்னடைவாக அமைந்தது.

தோல்வி குறித்துப் பேசிய பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், 'உண்மையிலே இந்த தோல்வியை ஏற்றுக் கொள்வதில் மிகவும் கடினமாக இருக்கிறது' என வருத்தம் தெரிவித்தார். தோல்விக்கான காரணம் கூற அவர் விரும்பவில்லை. எனினும், 'கிரிக்கெட்டுக்கு இது உண்மையிலே நல்ல போட்டி. இரு அணிகளும் சிறப்பாக செயல்பட்டன' என்று குறிப்பிட்டார்.
மும்பை இந்தியன்ஸின் திலக் வர்மாவின் ஆட்டத்தை ஐயர் வெகுவாகப் பாராட்டினார். 'திலக் வர்மா அபாரமாக பேட்டிங் செய்தார். எந்த ஷாட்டை அடித்தால் ரன் கிடைக்கும் என்பதைப் புரிந்துகொண்டு, பில்டிங் செட்டப்புக்கு ஏற்ற வகையில் தனது பேட்டிங்கை மாற்றி ரன்களைச் சேர்த்தார். உண்மையிலே அவருக்குத்தான் பாராட்டுகளைச் சொல்ல வேண்டும்' என்றும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய ஸ்ரேயாஸ் ஐயர் ' 170-180 ரன்கள் மும்பை எடுத்திருந்தபோது, வெற்றி பெறுவோம் என நம்பினோம். ஆனால், திலக் வர்மா போட்டியை முற்றிலும் மாற்றினார். தொடர்ந்து சிக்ஸர்களை அடித்து மும்பை அணிக்கு பெரும் உத்வேகத்தை அளித்து, எளிதாக வெற்றியைப் பெற்றுவிட்டார்' என்றார்.
வரவிருக்கும் போட்டிகள் குறித்துப் பேசிய அவர், 'ஆர்சிபிக்கு எதிரான அடுத்த போட்டியை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறோம். அது மதிய நேரப் போட்டி. கடைசி இரண்டு போட்டிகளிலும் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இது நிச்சயம் சவாலானது. எனினும், அதை விளையாட ஆர்வமாக உள்ளோம்' என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications
