அகமதாபாத்: ஐபிஎல் தொடரின் குவாலிஃபையர் 2வது போட்டியில் மும்பை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி புதிய சாதனை படைத்துள்ளது. இதன் மூலமாக ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள பஞ்சாப் அணி, நாளை ஆர்சிபி அணிக்கு எதிராக விளையாட உள்ளது.
ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றில் குவாலிஃபையர் 2வது போட்டியில் மும்பை அணியை எதிர்த்து பஞ்சாப் அணி விளையாடியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 203 ரன்களை குவித்தது. ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் மும்பை அணி 200 ரன்களுக்கு மேல் குவித்த 18 போட்டிகளில் ஒருமுறை கூட தோல்வி அடைந்ததில்லை.

இதனால் பஞ்சாப் அணி சரித்தர வெற்றியை படைக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டது. இதன்பின் பஞ்சாப் அணிக்காக பிரியன்ஷ் ஆர்யா - பிரப்சிம்ரன் சிங் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இதில் பிரப்சிம்ரன் சிங் 6 ரன்களில் ஆட்டமிழக்க, உடனடியாக இங்லிஸ் களமிறங்கினார். களத்தில் வந்த உடன் 2 பவுண்டரிகள் அடிக்க, 4வது ஓவரில் பிரியன்ஷ் ஆர்யா சிக்ஸ், பவுண்டரியை விளாசினார்.
அப்போது 5வது ஓவரை வீச பும்ரா அழைக்கப்பட்டார். அந்த ஓவரில் ஜோஷ் இங்லிஸ் கொஞ்சம் கூட அசராமல் 4, 6, 4, 6 என்று 20 ரன்களை விளாச, ஒட்டுமொத்த மும்பை அணியும் மிரண்டுபோனது. ஆனால் அடுத்த ஓவரிலேயே பிரியன்ஷ் ஆர்யா 20 ரன்களில் வெளியேறினார். பின் ஸ்ரேயாஸ் - இங்லிஸ் கூட்டணி இணைந்து விரைவாக ரன்களை சேர்த்தது. 6 ஓவர்களில் பஞ்சாப் அணி 64 ரன்களை எடுத்திருந்தது.
தொடர்ந்து ஹர்திக் பந்தில் ஜோஷ் இங்லிஸ் 38 ரன்களில் ஆட்டமிழக்க, நேஹல் வதேரா - ஸ்ரேயாஸ் கூட்டணி இணைந்தது. நேஹல் வதேரா அதிரடியாக ரன்களை குவிக்க, ஹர்திக் வீசிய 10வது ஓவரில் 17 ரன்கள் விளாசப்பட்டது. தொடர்ந்து 11 மற்றும் 12 ஆகிய இரு ஓவர்களிலும் சேர்த்து 11 ரன்கள் மட்டுமே சேர்க்க, டாப்லீ வீசிய 13வது ஓவரில் ஸ்ரேயாஸ் ஐயர் ஹாட்ரிக் சிக்ஸ் அடித்து கம்பேக் கொடுத்தார்.
இதனால் 15 ஓவர்களில் மும்பை அணியின் ஸ்கோர் 147 ரன்களாக உயர்ந்தது. பின்னர் அஸ்வனி குமார் வீசிய 16வது ஓவரில் வதேரா 48 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினாலும், பஞ்சாப் அணி 16 ரன்களை சேர்த்தது. இதனால் கடைசி 4 ஓவர்களில் 41 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை உருவாகியது. இதனிடையே சிறப்பாக ஆடிய ஸ்ரேயாஸ் ஐயர் 27 பந்துகளில் அரைசதத்தை கடந்தார்.
தொடர்ந்து ஷஷாங்க் சிங் 2 ரன்களில் ரன் அவுட்டாகி வெளியேற, ஸ்டாய்னிஸ் களம் புகுந்தார். அப்போது 18வது ஓவரை வீச வந்த பும்ரா பவுலிங்கில் 8 ரன்கள் சேர்க்கப்பட, கடைசி 2 ஓவரில் பஞ்சாப் வெற்றிக்கு 23 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது அஸ்வனி குமார் வீசிய முதல் பந்திலேயே சிக்ஸ் பறக்க, அடுத்த பந்தை நோ-பாலாக வீசினார். அதிலும் சிக்ஸ் பறக்க, பஞ்சாப் அணியின் வெற்றி உறுதியானது.
இறுதியாக பஞ்சாப் அணி 19 ஓவர்கள் முடிவிலேயே பஞ்சாப் அணி 207 ரன்கள் எடுத்து அபார வெற்றியை பெற்றது. கடைசி வரை களத்தில் இருந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 41 பந்துகளில் 8 சிக்ஸ், 5 பவுண்டரி உட்பட 87 ரன்களை குவித்தார். இதன் மூலமாக ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு பஞ்சாப் அணி முன்னேறி இருக்கிறது. இதன் மூலமாக 11 ஆண்டுகளுக்கு பின் பஞ்சாப் அணி மீண்டும் ஐபிஎல் இறுதிக்கு முன்னேறியுள்ளது. அதில் ஆர்சிபி - பஞ்சாப் அணிகள் விளையாட உள்ளன.