அகமதாபாத்: 2025 ஐபிஎல் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் செய்த சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களை வியப்பின் உச்சத்திற்கு கொண்டு சென்று இருக்கிறது. முதல் பிளே ஆஃப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக வெறும் 101 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி இருந்தது பஞ்சாப் கிங்ஸ் அணி.
ஆனால், அடுத்த போட்டியிலேயே அதில் இருந்து மீண்டு வந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 204 ரன்கள் என்ற இலக்கை அதிரடியாக சேஸிங் செய்து முடித்துள்ளது. அதிலும் கேப்டனான ஸ்ரேயாஸ் ஐயர் முன் நின்று ஒரு சிறந்த கேப்டன் இன்னிங்ஸ் ஆடினார். அவர் 41 பந்துகளில் 87 ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் நின்று தனது அணியை வெற்றி பெற வைத்தார்.

மேலும், ஒரு கேப்டனாக அவர் பல முடிவுகளையும் சுயமாகவே எடுத்தார். அதே சமயம், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் வரை முன்னேறிய அணிகளான மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகளின் கேப்டன்கள் தங்களின் பயிற்சியாளர்கள் குழுவை அதிகம் நம்பி இருந்தனர். அவர்களது ஆலோசனையை போட்டியின் இடையே கேட்டு அதை அப்படியே பின்பற்றினார்கள்.
ஆனால், ஸ்ரேயாஸ் ஐயர், பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் உடன் நேருக்கு நேர் நின்று விவாதம் செய்து முடிவுகளைத் தானே எடுத்தார். உதாரணத்திற்கு பிளே ஆஃப் சுற்றில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியின் போது, அந்த அணி 101 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனபோது ரிக்கி பாண்டிங் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இடையே ஓய்வறையில் வாக்குவாதம் நடந்தது.
ரிக்கி பாண்டிங் உடன் நேருக்கு நேர் நின்று வாதம் செய்யும் அளவுக்கு ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டன்சியில் தேர்ந்தவரா? என்ற சந்தேகம் அப்போது இருந்தது. ஆனால், அந்தப் போட்டி முடிந்த பிறகு ஸ்ரேயாஸ் ஐயர் பேசுகையில், "நாங்கள் போரில் தோற்கவில்லை, ஒரு களத்தில் மட்டும் தான் தோற்று இருக்கிறோம்" என்று தெளிவாகவே சொன்னார். அதற்கு ஏற்ப அடுத்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக வெற்றி பெற்று தாங்கள் இன்னும் போரில் தோற்கவில்லை என்பதை ஆணித்தரமாக நிரூபித்து இருக்கிறார்.
அதே சமயம், குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனான சுப்மன் கில் தங்கள் அணியின் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ராவை அதிகம் சார்ந்து இருந்தார். அதேபோல, மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தங்கள் அணியின் பயிற்சியாளர் குழுவைச் சேர்ந்த மஹேலா ஜெயவர்த்தனே, லசித் மலிங்கா, கீரோன் பொல்லார்ட் ஆகியோரை அதிகம் சார்ந்து இருந்தார். அவர்களது ஆலோசனைகளை போட்டியின் இடையேயும் அவர் கேட்டுக் கொண்டு அதன்படி செயல்பட்டார். ஆனால், அது தோல்வியில் தான் முடிந்து இருக்கிறது.
அதேபோல, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக ரஜத் படிதார் இருந்தாலும், முக்கியமான சூழ்நிலைகளில் விராட் கோலி தான் பல்வேறு முடிவுகளை ஆடுகளத்தில் இருந்து எடுக்கிறார். இப்படி மற்ற கேப்டன்கள் எல்லாம் மற்றவர்களை சார்ந்து இருக்கும் நிலையில், ஸ்ரேயாஸ் ஐயர் தான் இந்த ஆண்டின் உண்மையான கேப்டனாக ஜொலித்து இருக்கிறார். இறுதிப்போட்டியில் தனது கேப்டன்சியால் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு கோப்பையைப் பெற்றுக் கொடுப்பாரா என்று பார்க்கலாம்.