மும்பை: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலும், இந்த போட்டியில் ஒரு கட்டத்தில் ஹர்திக் பாண்டியா ஆடிய ஆட்டத்தால் பெங்களூர் அணி ரசிகர்கள் கண்ணீர் விடாத குறையாக கதி கலங்கிப் போயிருந்தனர்.
இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்து 221 ரன்கள் எடுத்தது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 222 ரன்கள் என்ற சவாலான இலக்கை நிர்ணயம் செய்து இருந்தது. முதல் 12 ஓவர்களில் மும்பை இந்தியன்ஸ் அணி 99 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

அப்போது ஆறாவது வரிசையில் ஹர்திக் பாண்டியா பேட்டிங் செய்ய வந்தார். அவர் ஜோஷ் ஹேசல்வுட் வீசிய 14வது ஓவரில் சரவெடியாக ஆடினார். இரண்டு சிக்ஸ் மற்றும் இரண்டு பவுண்டரி என அந்த ஓவரில் மட்டுமே 22 ரன்கள் சேர்க்க காரணமாக இருந்தார். அதற்கு அடுத்த ஓவரை அவரது அண்ணன் க்ருனால் பாண்டியா வீசினார்.
அந்த ஓவரிலும் இரண்டு சிக்ஸர்களை அடித்தார். அந்த ஓவரில் மும்பை இந்தியன்ஸ் 19 ரன்கள் சேர்த்தது. இந்த இரண்டு ஓவர்களால் ஆட்டமே தலைகீழாக மாறியது. அதுவரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றி பெறும் என அந்த அணியின் ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தனர்.
ஆனால், ஹர்திக் பாண்டியா வெறும் 8 பந்துகளில் 33 ரன்கள் சேர்த்ததை பார்த்ததும் மிரண்டு போனார்கள். அதனால், இந்த போட்டியில் பெங்களூர் அணி தோல்வி அடையுமோ என்ற பதற்றம் ஆர்சிபி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.
கடைசி 30 பந்துகளில் 65 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என மும்பை இந்தியன்ஸ் அணி நம்பிக்கையுடன் ஆடியது. திலக் வர்மாவும் அப்பொழுது தொடர்ந்து சிக்ஸர்களையும், பவுண்டரிகளையும் அடித்தார். கடைசி மூன்று ஓவர்களில் 41 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற அளவுக்கு மும்பை இந்தியன்ஸ் அணி முன்னேறியது.
ஆனால், அப்போது திலக் வர்மா 29 பந்துகளில் 56 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதற்கு அடுத்து 19 வது ஓவரின் முதல் பந்தில் ஹர்திக் பாண்டியா 15 பந்துகளில் 42 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அங்கிருந்து போட்டி மீண்டும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் வசம் சென்றது.
ஹர்திக் பாண்டியா பேட்டிங் செய்தவரை ஆர்சிபி ரசிகர்கள் கலக்கத்திலேயே இருந்தனர். அவர் ஆட்டமிழந்த பின்பு தான் அந்த அணி நிம்மதி அடைந்தது. பின்னர் 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றது.