மும்பை: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மா மற்றும் பந்துவீச்சாளர் யாஷ் தயாள் செய்த சொதப்பலான சம்பவத்தை பார்த்து விராட் கோலி கோபத்தின் உச்சிக்கே சென்றார். தனது தொப்பியை அவிழ்த்து தரையில் வீசி சத்தம் போட்டு தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.
மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிய போட்டி வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் எடுத்தது.

மும்பை இந்தியன்ஸ் அணி அடுத்து சேஸிங் செய்த போது முதல் 10 ஓவர்கள் வரை சற்று தடுமாற்றம் இருந்தது. ஆனாலும், அதிரடி மன்னன் சூரியகுமார் யாதவ் களத்தில் இருந்தார். அவர் எப்போது வேண்டுமானாலும் அதிரடி ஆட்டத்தை துவங்குவார் என்பதால் பெங்களூரு அணி பதற்றத்திலேயே இருந்தது.
அப்போது 12 வது ஓவரை யாஷ் தயாள் வீசினார். அந்த ஓவரில் சூரியகுமார் யாதவ் அடித்த இரண்டாவது பந்து டாப் எட்ஜ் ஆனது. பந்து மேலே சென்றதை அடுத்து விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மா பந்தை நோக்கி ஓடி வந்து தான் கேட்ச் பிடிப்பதாக சத்தமாக சொன்னார்.
ஆனால், பந்துவீச்சாளர் யாஷ் தயாளும் பந்தை பிடிக்க முயன்றார். ஜிதேஷ் சர்மா பந்தை கேட்ச் பிடிக்க வருவதை அவர் பார்க்கவில்லை. பொதுவாக இது போன்ற நேரத்தில் விக்கெட் கீப்பர் கேட்ச் பிடிப்பதே சரியாக இருக்கும். அவர் கிளவுஸ் அணிந்து இருப்பார் என்பதால் உயரே செல்லும் பந்தை சரியாக கேட்ச் பிடிக்க முடியும்.
ஆனால், யாஷ் தயாள் தன்னை சுற்றி நடப்பதை உணரவில்லை. இதை அடுத்து இருவரும் ஒருவர் மேல் ஒருவர் மோதிக்கொண்டனர். யாஷ் தயாள் பந்தை பிடிப்பதற்கு பதிலாக ஜிதேஷ் சர்மாவின் முகத்தை தான் பிடித்தார். அந்த அளவுக்கு சுற்றி என்ன நடக்கிறது என்று பார்க்காமல் பந்தை மட்டும் பார்த்த வண்ணம் இருந்தார் யாஷ் தயாள்.
இருவருமே அந்த கேட்சை பிடிக்கவில்லை. இந்த மோசமான ஃபீல்டிங் சம்பவத்தை பார்த்த விராட் கோலி கோபத்தின் உச்சிக்கே சென்றார். தனது தொப்பியை அவிழ்த்து தரையில் வீசி கோபமாக கத்தினார். எனினும், சூரியகுமார் யாதவ் அந்த ஓவரின் கடைசி பந்தில் ஆட்டம் இழந்தார். அப்போது அவர் 26 பந்துகளில் 28 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.
அதனால் சூரியகுமார் யாதவின் நழுவிப்போன கேட்ச் வாய்ப்பால் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. பின்னர் திலக் வர்மா மற்றும் ஹர்திக் பாண்டியாவின் அதிரடி ஆட்டத்தால் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி நோக்கி வேகமாக முன்னேறியது. திலக் வர்மா 29 பந்துகளில் 56 ரன்கள் சேர்த்தார். ஹர்திக் பாண்டியா 15 பந்துகளில் 42 ரன்கள் சேர்த்தார். அவர்கள் இருவரும் கடைசி நேரத்தில் ஆட்டம் இழந்தனர்.
அதன் பின் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் மட்டுமே எடுத்து 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.