MI vs RR: இந்த தோல்விக்கு பவுலர்களே பொறுப்பேற்க வேண்டும்..5 பந்துகள் சரியாக வீசி இருக்கனும்- ஹர்திக்
கவுஹாத்தி: ஐபிஎல் 2026 சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இமாலய வெற்றி கிடைத்துள்ளது. டாஸ் வென்ற ஹர்திக் பாண்டியா பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தபோது, ராஜஸ்தானுக்கு சாதகமற்ற சூழல் இருப்பதாகவே தோன்றியது.பிட்ச் நீண்ட நேரம் மூடப்பட்டு இருந்ததாலும், பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி ஆகியோருக்கு அது ஒரு பொருட்டாகவே இல்லை. இந்த இணை களமிறங்கியதுமே அதிரடியாக விளையாடி, மின்னல் வேக தொடக்கத்தை அளித்தது. இதனால், ராஜஸ்தான் அணி வெறும் 11 ஓவர்களில் 150 ரன்கள் குவித்து அசத்தியது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் சேஸிங் ஒருபோதும் வேகமெடுக்கவில்லை. முதல் இரண்டு ஓவர்களுக்குள்ளேயே ரிகெல்டன் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் ஆட்டமிழக்க, அதனைத் தொடர்ந்து ரோஹித்தும் விரைவில் வெளியேறினார். இது மும்பை அணியை பெரும் சிக்கலில் தள்ளியது.ரூதர்ஃபோர்ட் மற்றும் நமன் தீர் ஆகியோரின் சற்று நேர அதிரடி ஆட்டம் சில பவுண்டரிகளைப் பெற்றுக் கொடுத்தாலும், இலக்கு எட்ட முடியாததாகவே இருந்தது. இறுதியில், மும்பை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
போட்டிக்குப் பிறகு பேசிய மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா, “நாங்கள் வீச வேண்டிய பந்துகளை சரியாக செயல்படுத்தவில்லை என்று நினைக்கிறேன், ஆனால் அவர்கள் சிறப்பாக விளையாடினார்கள். எங்கள் பந்துவீச்சாளர்கள் பொறுப்பேற்க வேண்டும். ஒரு பந்துவீச்சு குழுவாக, நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை, அவர்கள் சிறப்பான கிரிக்கெட்டை விளையாடினார்கள்,” என்று பாண்டியா குறிப்பிட்டார்.
பேட்டிங் அணுகுமுறை குறைபாடு குறித்து கேட்கப்பட்டபோது, “இந்த ஆட்டத்தை நான் பேட்டிங் மீது குறை சொல்ல மாட்டேன். இது முற்றிலும் பந்துவீச்சுப் பிரிவினர்தான் பொறுப்பேற்றிருக்க வேண்டும். இது டி20 கிரிக்கெட். எப்போதும் சரியான சில பந்துகளை வீசுவது முக்கியம். 27 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றோம் என்றால், ஐந்து நல்ல பந்துகளையும், ஐந்து சிக்ஸர்கள் குறைந்ததையும் பற்றிப் பேசுகிறோம்.
சரியான பந்துகளை வீசியிருந்தால், நாங்கள் ஆட்டத்தில் இருந்திருப்போம். அவர்களின் தொடக்க வீரர்கள் சில ஓவர்களை வலுக்கட்டாயமாக எங்களிடமிருந்து எடுத்துக்கொண்டு, எங்களை ஆட்டத்தில் இருந்து விரட்டிவிட்டார்கள். அதன்பிறகு நாங்கள் பின்னாடியே ஓடிக்கொண்டிருந்தோம்” என்று விளக்கினார்.
வைபவ் சூர்யவன்ஷி குறித்துப் பேசிய ஹர்திக், “15 வயது சிறுவன் இப்படி விளையாடுவதைப் பார்ப்பது மிகவும் பிரமிப்பாக இருக்கிறது. அவனைப் பற்றி ஆட்டத்திற்கு முன்னதாகவே நிறைய விவாதித்தோம். அவனுடைய பேட்டிங் பாணியும், அச்சமற்ற தன்மையும், அவன் அடிக்கும் ஷாட்களும் ஆச்சரியப்பட வைக்கின்றன. எதிர்காலத்தில் அவன் சிறப்பாக வர எனது நல்வாழ்த்துக்கள்,” என்றார்.
அடுத்த ஆர்சிபி போட்டி குறித்துக் கருத்துத் தெரிவித்த பாண்டியா, “தவறுகளில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். நாளை காலை வரும், சூரியன் உதிக்கும். ஆகவே, எங்கள் தவறுகளில் இருந்து கற்றுக்கொண்டு அடுத்த ஆட்டத்திற்காக சிறப்பாக தயாராக வேண்டும்,” என்று தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications