மும்பை: ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணிக்காக விளையாடிய முதல் போட்டியிலேயே அபாரமாக விளையாடி சதம் விளாசிய இஷான் கிஷன், அடுத்ததாக ஆடிய 6 இன்னிங்ஸில் வெறும் 32 ரன்களை மட்டுமே சேர்த்து ஏமாற்றம் அளித்துள்ளார். இதனால் இஷான் கிஷனை ரசிகர்கள் ஸ்கேம்மர் என்று கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாக மும்பை அணிக்காக விளையாடி வந்த இஷான் கிஷன், எதிர்பார்த்த அளவிற்கு ரன்களை சேர்க்கவில்லை. இதனால் மும்பை அணி நிர்வாகம் இஷான் கிஷனை கழற்றிவிட்டது. இதன்பின் ஐபிஎல் மெகா ஏலத்தில் இஷான் கிஷனை ரூ.11.25 கோடிக்கு ஐதராபாத் அணி வாங்கியது. ஏற்கனவே அதிரடி பேட்டிங் வரிசையை வைத்துள்ள ஐதராபாத் அணிக்கு, அவர் கூடுதல் வலிமை சேர்ப்பார் என்று பார்க்கப்பட்டது.

அதற்கேற்க ராஜஸ்தான் அணிக்கு எதிரான முதல் போட்டியில் ஐதராபாத் அணிக்காக களமிறங்கிய இஷான் கிஷன் அதிரடியாக சதம் விளாசினார். சிறப்பாக ஆடிய அவர், அந்த போட்டியில் மட்டும் 106 ரன்களை விளாசினார். இதனால் இந்த சீசனில் இஷான் கிஷன் தனது பழைய ஃபார்முக்கு வந்து இந்திய அணி தேர்வுக் குழுவிற்கு பதிலடி கொடுப்பார் என்று வர்ணனையாளர்கள் கூறினர்.
ஆனால் இஷான் கிஷன் 2வது போட்டிக்கு பின் மீண்டும் தனது பழைய ஃபார்முக்கு வந்துள்ளார். ஏனென்றால் இஷான் கிஷனின் ஐபிஎல் வரலாறு இப்படிதான் இருந்திருக்கிறது. முதல் போட்டிக்கு பின் ஆடிய 6 இன்னிங்ஸ்களில் மொத்தமாகவே 32 ரன்களை தான் சேர்த்திருக்கிறார். இதனால் ஐதராபாத் அணியின் மிடில் ஆர்டர் கூடுதல் சிக்கலை எதிர்கொண்டுள்ளது.
இதனால் வரும் போட்டிகளில் ஐதராபாத் அணியின் பேட்டிங்கில் இருந்து இஷான் கிஷனை நீக்கிவிட்டு அபினவ் மனோகருக்கு வாய்ப்பு வழங்கலாம். ஏனென்றால் இஷான் கிஷனிடம் தொடக்க காலம் முதலே கன்சிஸ்டன்சி பிரச்சனை இருந்து வருகிறது. இதன் காரணமாக மும்பை அணி நிர்வாகம் அவரை கழற்றிவிட்டது.
சிறந்த ஷாட்கள் இருந்தாலும், கொஞ்சம் ஸ்விங்கோ அல்லது பிட்சில் ஸ்பின்னோ இருந்தால், கதகளி ஆடுவதை பார்க்க முடியும். இன்றைய போட்டியிலும் கூட வில் ஜாக்ஸ் வீசிய பந்தில் இறங்கி அடிக்க முயற்சித்து டர்னில் ஏமாந்து 2 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்துள்ளார். இதனால் ரசிகர்கள் இஷான் கிஷனை ஸ்கேம்மர் என்று கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.