மும்பை: ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி விளையாடி வரும் நிலையில், முதல் ஓவரிலேயே 2 கேட்ச்களை கோட்டைவிட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல் முக்கிய ஸ்பின்னரான கரண் சர்மாவின் கைகளில் ரத்தம் வந்து ஓய்வறைக்கு சென்ற நிலையில், கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் காலில் காயம் அடைந்திருக்கிறார்.
ஐபிஎல் தொடரின் 33வது லீக் போட்டியில் ஐதராபாத் அணியை எதிர்த்து மும்பை அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் ஐதராபாத் அணி தரப்பில் அபிஷேக் சர்மா - டிராவிஸ் ஹெட் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. மும்பை அணி தரப்பில் முதல் ஓவரை தீபக் சஹர் வீசினார்.

அவர் வீசிய முதல் பந்திலேயே அபிஷேக் சர்மா டவுன் தி டிராக் இறங்கி வந்து பேட்டை விளாச, அந்த பந்து அபிஷேக் சர்மா பேட்டில் அடித்து ஸ்லிப் திசைக்கு சென்றது. அதனை வில் ஜாக்ஸ் எளிதாக பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட போது, வில் ஜாக்ஸ் கோட்டைவிட்டார். இதனால் மும்பை அணி வீரர்கள் முதல் பந்திலேயே ஏமாற்றத்தை வெளிப்படுத்தினர்.
தொடர்ந்து அந்த ஓவரிலேயே டிராவிஸ் ஹெட் கவர்ஸ் திசையில் அடித்த பந்து கரண் சர்மாவின் கைகளுக்கு அருகே சென்று விழுந்தது. அதனை பிடிக்காமல் கரண் சர்மா சொதப்பினார். முதல் ஓவரிலேயே அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகிய இரு பேட்ஸ்மேன்களும் கொடுத்த கேட்சை கோட்டைவிட்டனர். தொடர்ந்து அபிஷேக் சர்மா கொடுத்த கேட்சை பிடிக்க முயன்று கரண் சர்மா கைகளில் இருந்து ரத்தம் வந்தது.
இதனால் களத்தில் இருந்து வெளியேறிய கரண் சர்மா உடனடியாக ஓய்வறையை நோக்கி ஓடினார். தொடர்ந்து பும்ராவை அட்டாக்கில் கொண்டு வந்த போதும், மும்பை அணிக்கு விக்கெட் கிடைக்கவில்லை. தொடர்ந்து பவர் பிளே ஓவர்கள் முடிவடைந்து கேப்டன் ஹர்திக் பாண்டியா அட்டாக்கில் வந்தார். அவர் 2 பந்துகளை வீசிய நிலையில், திடீரென காலினை பிடித்து கொண்டு அமர்ந்தார்.
இதனால் மும்பை அணி ரசிகர்கள் பதற்றமடைந்தனர். ஏற்கனவே கரண் சர்மாவின் 4 ஓவர்களை யாரை கொண்டு நிரப்புவது என்று மும்பை அணி குழம்பி இருந்த நிலையில், தற்போது ஹர்திக் பாண்டியாவும் காயமடைந்தாரா என்று குழம்பினர். ஆனால் பிசியோ வந்து சிகிச்சை அளித்த பின், ஹர்திக் பாண்டியா உடனடியாக பவுலிங் செய்து அபிஷேக் சர்மாவின் விக்கெட்டை வீழ்த்தி கம்பேக் கொடுத்தார்.