மும்பை : இந்திய அணியின் இளம் வீரர் ஸ்ரேயாஸ் ஐயருக்கு எந்த அறிவுரையும் தேவையில்லை என்று மும்பை அணியின் கேப்டன் அஜிங்கியா ரஹானே தெரிவித்துள்ளார்.
ரஞ்சி டிராபி தொடருக்கான அரையிறுதி சுற்று நாளை தொடங்குகிறது. வலிமை வாய்ந்த மும்பை அணியை எதிர்த்து தமிழ்நாடு அணி மோதவுள்ளது. இந்த அரையிறுதி போட்டியில் விளையாடுவதற்காக நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் மும்பை அணிக்கு திரும்பியுள்ளார். ரஞ்சி டிராபி தொடரில் விளையாடவில்லை என்பதற்காக பிசிசிஐ ஒப்பந்தத்தில் இருந்து கழற்றிவிடப்பட்டார் ஸ்ரேயாஸ் ஐயர்.

தற்போது மும்பை அணிக்கு திரும்பியதன் மூலமாக தவறை சரி செய்ய முன்வந்துள்ளார் ஸ்ரேயாஸ் ஐயர். இதனால் பிசிசிஐ ஒப்பந்தத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் சேர்க்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியை முன்னிட்டு மும்பை அணியின் கேப்டன் அஜிங்கியா ரஹானே செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது ரஹானே பேசுகையில், ஸ்ரேயாஸ் ஐயர் அனுபவம் வாய்ந்தவர். மும்பை அணிக்காக எப்போது களமிறங்கினாலும் சிறப்பாக விளையாடி இருக்கிறார். அரையிறுதிக்கு முன்பாக அவர் மீண்டும் மும்பை அணியுடன் இணைந்திருப்பது கூடுதல் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய சூழலில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு எந்த அறிவுரையோ பாராட்டோ தேவையில்லை. மும்பை அணிக்காக அதிக ரன்களை விளாசி இருக்கிறார் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, இந்த சீசனில் 6 போட்டிகளில் விளையாடி 115 ரன்களை தான் சேர்த்திருக்கிறேன். இது மோசமான சூழல் தான். ஆனால் இதற்கு மதிப்பளிக்க வேண்டும். சில நேரங்களில் தொடர்ச்சியாக சிறப்பாக ரன்களை சேர்ப்பது போல், தொடர்ச்சியாக ரன்கள் சேர்க்க முடியாத சூழலும் வரும். இதில் எந்த தவறும் இல்லை. அதனால் எனது அடிப்படைகளை சிறப்பாக செய்து வருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல் காலிறுதி போட்டியில் பிரித்வி ஷா விரலில் காயமடைந்த நிலையில், அவரது பேட்டிங் வரிசை மாற்றப்பட்டது. இதுகுறித்த கேள்விக்கு, பிரித்வி ஷா மும்பை அணியின் மிகமுக்கிய வீரர். கடந்த போட்டியில் காயமடைந்தாலும் முஷீர் கானுக்கு முன்பாகவே களமிறக்க நினைத்தோம். ஆனால் அதற்கு வாய்ப்பில்லாமல் போனது என்று தெரிவித்தார்.