சென்னை: இந்தியாவும், பாகிஸ்தானும் 2வது முறையாக உலகக் கோப்பைப் போட்டியில் மோதியது பெங்களூரில், 1996ம் ஆண்டு.
அந்த உலகக் கோப்பைப் போட்டியின் காலிறுதி ஆட்டம் பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் மார்ச் 9ம் தேதி நடந்தது.

அஸாருதீன் தலைமையிலான இந்திய அணி, பாகிஸ்தான் அணியை பிரித்து மேய்ந்து விட்டது இப்போட்டியில். முதல் முதலில் வாலாட்டிய மியான்தத்தை இந்தப் போட்டியில் சுருட்டி அடக்கினர் இந்திய வீரர்கள்.
இப்போட்டியில் சித்துவும், சச்சினும் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். இதில் சித்து ரன்களைக் குவித்தார். சச்சினோ பால்களை சாப்பிட்டார். சித்து 93 ரன்களைக் குவித்து ஆட்டமிழக்க, சச்சின் 31 ரன்களோடு ஏறக்கட்டினார்.
தொடர்ந்து மஞ்சிரேகர் 20, அஸாருதீன் 27, காம்ப்ளி 24 என நடையைக் கட்டினர். அஜய் ஜடேஜா சற்றே அதிரடியாக ஆடி 45 ரன்களைக் குவிக்க இந்தியா 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 287 ரன்களைத் தொட்டது.
பாகிஸ்தான் தரப்பில் வக்கார் யூனிஸ், முஷ்டாக் அகமது ஆகியோர் தலா 2 விக்கெட்களைச் சாய்த்தனர்.
பின்னர் ஆட வந்த பாகிஸ்தானுக்கு ஆமிர் சொஹைலும், சயீத் அன்வரும் நல்ல தொடக்கத்தைக் கொடுத்தனர். ஆமிர் 55 ரன்களைச் சேர்க்க அன்வர் 48 ரன்களை எடுத்தார். அதன் பின்னர் சலீம் மாலிக் 38 ரன்கள் சேர்த்தார். மியான்தத் 38 ரன்களில் ரன் அவுட் செய்யப்பட்டார்.
நன்றாக ஆடி வந்த பாகிஸ்தான் வீரர்கள் திடீரென சரியவே பாகிஸ்தான் அணி 49 ஓவர்களில் 248 ரன்களோடு முடங்கியது. இந்தியா 39 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் பல சுவாரஸ்யங்கள் அடங்கியிருந்தன.
1989ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த நேரு கோப்பை இறுதிப் போட்டிக்குப் பின்னர் பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு வராமல் இருந்தது. இந்த 1996 உலகக் கோப்பைப் போட்டியின் போதுதான் பாகிஸ்தான் அணி மீண்டும் இந்தியாவுக்கு வந்தது. இதனால் பெரும் எதிர்பார்ப்பு, பரபரப்புக்கு மத்தியில் இந்தப் போட்டி நடந்தது.
பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடந்த முதல் பகல் இரவுப் போட்டி இது என்பது பெங்களூருக்கு பெருமையான விஷயமாகும்.
இப்போட்டியின் கடைசி 4 ஓவர்களில் மட்டும் இந்தியா 57 ரன்களைக் குவித்தது. அதிலும் வக்கார் யூனிஸின் ஒரு ஓவரில் மட்டும் 22 ரன்களை விளாசியது இந்தியா.
வக்கார் யூனிஸ் இப்போட்டியில் தனது 200வது விக்கெட்டை வீழ்த்தியிருந்தார்.
பாகிஸ்தான் தனது முதல் பத்து ஓவர்களில் 84 ரன்களைக் குவித்து நல்ல நிலையில்தான் இருந்தது. பின்னர் தான் சொதப்பி விட்டது.
கிரிக்கெட்டின் பேட் பாய் என்றும் சேட்டைக்காரர் என்றும் அறியப்பட்ட ஜாவேத் மியான்தத் இந்த போட்டியுடன் ஒரு நாள் கிரிக்கெட்டிலிருந்து விடை பெற்றார் என்பதால் இந்தப் போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறிப் போனது.