
எடுபடாத ஃபாஸ்ட்
லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்து வரும் இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியில், இரண்டாம் இன்னிங்ஸில் இந்திய அணி 466 ரன்கள் குவித்தது. இதனால், இங்கிலாந்துக்கு 368 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. நேற்று நான்காம் நாள் ஆட்டத்தில், இந்தியா 350 ரன்களுக்கும் மேல் இலக்கு நிர்ணயித்த போது கைத்தட்டிய கைகள், இப்போது கைகளை பிசைந்து கொண்டிருக்கின்றன. காரணம், வேகப்பந்து வீச்சு சுத்தமாக எடுபடவில்லை. ஆகையால், இந்த டார்கெட் பத்தாதோ என்ற அச்சம், இப்போது ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

ஜொலிப்பது கடினம்
இந்தியா 300 ரன்கள் இலக்கு நிர்ணயித்தாலே போதும் என்றெல்லாம் முதலில் கூறப்பட்ட நிலையில், இப்போது இன்னும் 50 ரன்கள் கூடுதலாக அடித்திருக்கலாமோ என்று எண்ணத் தோன்றுகிறது. இந்நிலையில், இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் ஆதர்டன் இந்தியா இந்த போட்டியில் ஜெயிக்க வாய்ப்பில்லை என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் ஸ்கை ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில், "பிட்ச் மிகவும் ஃபிளாட்டாக உள்ளது. இந்தியாவின் பவுலிங் யூனிட்டை பாருங்கள்.. ஷமி இல்லை, இஷாந்த் இல்லை, அஷ்வின் இல்லை. குறிப்பாக முதல் இன்னிங்சில் பும்ராவைத் தான் இந்திய அணி அதிகம் நம்பியிருந்தது. ஜடேஜா இங்கு எப்படி ஆதிக்கம் செலுத்த முடியும் என்று தெரியவில்லை. அவர் தாக்கத்தை ஏற்படுத்தலாம், இது பேட்டிங் செய்ய ஒரு நல்ல பிட்ச். எனவே இங்கு ஜொலிப்பது கடினம்" என்று கூறியுள்ளார்.

ஜடேஜா பற்றி தெரியாது
ஆதர்டனின் இந்த கருத்தை வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மைக்கேல் ஹோல்டிங் வழிமொழிந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "இந்த பிட்ச் மாயாஜாலம் காட்டும் என்று நான் நினைக்கவில்லை. இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு அதிக தொல்லைகள் கொடுத்தது போன்று தெரியவில்லை. அவர்கள் பவுலிங்கே அப்படியிருக்கும் நிலையில், இந்திய பவுலர்களிடம் நான் அதிகம் எதிர்பார்க்க முடியாது. ஜடேஜாவை பற்றி எனக்கு எதுவும் தெரியவில்லை. அவருக்கு பதில் அஷ்வினை தேர்வு செய்திருக்கலாம்" என்று கூறியிருக்கிறார்.

நல்ல அறிகுறி
இந்திய அணியில் அஷ்வினை தேர்வு செய்திருக்க வேண்டும் என்று விராட் கோலி வீட்டின் வேலைக்காரர்கள் தான் இன்னும் கூறவில்லை என்று நினைக்கிறேன். அந்த அளவுக்கு மற்ற அனைவரும் அணியில் அஷ்வின் சேர்க்கப்படாதது குறித்து பேசிவிட்டனர். எனினும், இன்று ஐந்தாம் நாள் ஆட்டத்தின உணவு இடைவேளைக்கு முன்பாகவே இந்திய அணி 2 விக்கெட்டுகளை கைப்பறிவிட்டது. ஷர்துல் தாகூர் ஓவரில் ரோரி பர்ன்ஸ் 50 ரன்களில் எட்ஜ் ஆகி கேட்ச் கொடுத்து வெளியேற, டேவிட் மலன் 3 ரன்களில் ரன் அவுட் செய்யப்பட்டார். லன்ச்சுக்கு முன்பாகவே இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தியிருப்பது, நிச்சயம் இந்தியாவுக்கு நல்ல அறிகுறி தான்.


Click it and Unblock the Notifications











