ஐபிஎல் 2023: ஆர்சிபியில் இணைந்த டேஞ்சர் வீரர்.. மாற்று வீரராக அட்டகாச தேர்வு.. ஈ சாலா கப் நம்தே வா??
பெங்களூரு: ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நெருங்கி வரும் சூழலில் ஆர்சிபி அணி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி ஒன்று கிடைத்துள்ளது. முக்கிய வீரர் விலகிய சூழலில் அட்டகாசமான மாற்று வீரரை கொண்டு வந்துள்ளனர்.
2023ம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 31ம் தேதி முதல் தொடங்கி மே 28ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்கான போட்டி அட்டவணையை சமீபத்தில் பிசிசிஐ வெளியிட்டிருந்தது.
அதன்படி அனைத்து அணிகளும் இந்தாண்டு தங்களது ஹோம் மைதானத்திலும் விளையாடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அனைத்து அணிகளும் ஹோம் மைதானங்களில் தான் பயிற்சி முகாமையே தொடங்கியுள்ளனர்.

திடீர் பின்னடைவு
அதிகப்படியான ரசிகர் பட்டாளத்தை கொண்டிருந்தாலும், 15 ஆண்டுகளாக இன்னும் ஒரு கோப்பையை கூட ஆர்சிபி அணி வெல்லாமல் உள்ளது. எனவே இந்தாண்டு டூப்ளசிஸ் தலைமையிலாவது கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஆனால் அதற்கு பின்னடைவு ஏற்படும் வகையில் தான் நட்சத்திர வீரர் வில் ஜாக்ஸ் விலகியுள்ளார்.

என்ன காரணம்?
இங்கிலாந்தை சேர்ந்த ஆல்ரவுண்டரான வில் ஜாக்ஸை ரூ.3.2 கோடி கொடுத்து ஆர்சிபி அணி ஏலம் எடுத்தது. க்ளென் மேக்ஸ்வெல்லை போலவே அதிரடியும், ஆஃப் ஸ்பின்னராகவும் செயல்படுவார். ஆனால் தற்போது நடைபெற்று வரும் வங்கதேச தொடரில் காயம் ஏற்பட்டதால் ஐபிஎல்-ல் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

மாற்று வீரர் யார்
இந்நிலையில் ஜாக்ஸுக்கு மாற்று வீரர் அறிவிக்கப்பட்டுள்ளார். அதாவது நியூசிலாந்தின் மைக்கேல் பிரேஸ்வெல்லை தேர்வு செய்துள்ளனர். ஐபிஎல் ஏலத்தின் போது யாராலும் கண்டுக்கொள்ளப்படாத பிரேஸ்வெல் இந்தியாவுடனான தொடருக்கு பின்னர் மவுசு பெற்றுள்ளார். இந்தியாவுடனான 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய பிரேஸ்வெல் இந்திய களங்களை நன்கு புரிந்துக்கொண்டு செயல்பட்டார். ஒரு போட்டியில் சதமும் அடித்திருந்தார்.

புள்ளிவிவரங்கள்
மைக்கேல் பிரேஸ்வெல் இதுவரை 16 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 113 ரன்களையும், 21 விக்கெட்களையும் எடுத்துள்ளார். எனினும் தற்போது நல்ல ஃபார்மில் இருக்கும் இவரை அடிப்படை தொகையாக ரூ.1 கோடிக்கு ஆர்சிபி வாங்கியுள்ளது. இதனை பயன்படுத்தி இந்தாண்டு கவனம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications