‘ஸ்கிராச்சுல இருந்தே பிரச்சினை இருக்கு’.. ஆஸி, தொடர் குறித்த கங்குலி பேச்சு.. கிளார்க் தந்த பதில்!
இந்தூர்: இந்தியாவுடனான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி 4 - 0 என மோசமாக தோற்கும் என்ற கங்குலியின் கருத்து குறித்து அந்த அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் கிளார்க் பதில் கூறியுள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் விறுவிறுப்பு கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை நடந்துள்ள 2 போட்டிகளிலும் இந்தியாவின் கையே ஓங்கியிருந்தது.
இதனையடுத்து இரு அணியும் மோதும் 3வது டெஸ்ட் போட்டி நாளை இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் நடைபெறவுள்ளது. முதல் 2 போட்டிகளை போலவே இதிலும் வெற்றி காண இந்திய வீரர்களும், தோல்விக்கு பதிலடி கொடுக்க ஆஸ்திரேலிய வீரர்களும் முணைப்பு காட்டுகின்றனர்.

கங்குலியின் நம்பிக்கை
ஆனால் ஆஸ்திரேலிய அணி 4 - 0 என தோற்கும் என கங்குலி நம்பிக்கையாக கூறினார். அதில், நமது மிகப்பெரிய பிரச்சினையே தற்போதைய ஆஸ்திரேலிய அணியை பழைய அணியுடன் ஒப்பிட்டு பார்ப்பது தான் . ஆனால் அது அப்படி கிடையாது. தற்போதைய அணியில் மேத்யூவ் ஹெய்டன், ஜஸ்டின் லங்கர், ரிக்கிப் பாண்டிங், மார்க் வாக், கில் கிறிஸ்ட் போன்ற வீரர்கள் கிடையாது. அந்த தரம் தற்போது இல்லை எனக்கூறியிருந்தார்.

கிளார்க் பதில்
இந்நிலையில் இதற்கு ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக்கேல் கிளார்க் பதில் கூறியுள்ளார். அதில், ஆஸ்திரேலிய அணி நிச்சயம் கம்பேக் கொடுக்கும் என நினைக்கிறேன். ஒருவேளை அப்படி அவர்கள் சிறப்பாக ஆடாவிட்டால் ஒவ்வொரு ஆஸ்திரேலிய ரசிகர்களுக்கும் கோபத்தை ஏற்படுத்தும். மற்றொரு புறம் ஏன் ஆஸ்திரேலிய அணி குறித்து கங்குலி இப்படி கூறினார் என்பதையும் புரிந்துக்கொள்ள முடிகிறது.

பயிற்சிகள் சரியில்லை
என்னைப்பொறுத்தவரை ஆஸ்திரேலிய அணி முன்கூட்டியே இந்தியாவுக்கு சென்றிருக்க வேண்டும். தயாரான விதமே சரியில்லை. ஒருவேளை இந்தியாவுக்கு செல்ல முடியவில்லை என்றால் அமீரகத்திற்காவது சென்று பயிற்சி பெற்றிருக்க வேண்டும். இந்தியாவில் பயிற்சி போட்டியை நடத்தியிருக்க வேண்டும். ஆஸ்திரேலிய களத்தில் இருப்பதை போன்று இந்தியாவில் இருக்கும் என நினைத்துவிட்டு வந்துள்ளனர்.

சாத்தியமே இல்லை
இங்கிலாந்தில் ஸ்விங் இருக்கும், ஆஸ்திரேலியாவில் பவுன்ஸ் மற்றும் வேகம் இருக்கும். அதே போல இந்தியாவில் ஸ்பின் அதிகம் இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அப்படி இருக்கையில் ஆஸ்திரேலியாவில் பயிற்சியை பெற்றுவிட்டு, இந்திய களத்திற்கு ஏற்ப விளையாடிவிடுவேன் எனக்கூறுவது சாத்தியம் இல்லாத ஒன்று. தொடக்கத்தில் தவறு செய்துவிட்டு, தற்போது வருந்துவதில் பயனில்லை என கிளார்க் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications