துபாய்: 2025 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் எந்த இரண்டு அணிகள் மோதும் என்ற கேள்விக்கு பதிலளித்த முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க், ஆஸ்திரேலியா, இந்தியாவிடம் தோல்வியடையும் எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
மேலும் இந்திய அணி தான் சாம்பியன்ஸ் டிராபி இறுதியில் வெற்றி பெறும் எனவும், அதுவும் ஒரு ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தும் எனவும் மைக்கேல் கிளார்க் தனது கணிப்பை வெளியிட்டு இருக்கிறார். இதற்கு முன் 2023 ஒருநாள் போட்டி உலகக் கோப்பையிலும் இதே போன்ற சூழ்நிலை ஏற்பட்டது.

அப்போது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப் போட்டியில் மோதின. அந்தப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து ரன் குவிக்க திணறி, பின்னர் தோல்வியடைந்து இருந்தது. ஆனால், தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி நல்ல ஃபார்மில் உள்ளது. ஆஸ்திரேலிய அணியில் முக்கிய வேகப்பந்துவீச்சாளர்கள் இல்லை என்றாலும், அந்த அணியும் இதுவரை விளையாடிய போட்டிகளில் சிறப்பாகவே செயல்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் அரையிறுதிக்கு முன்னேறி இருக்கும் இந்தியா, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா மற்றும் அத்துடன் தென்னாப்பிரிக்காவும் முன்னேற வாய்ப்பு இருக்கும் நிலையில் இந்த அணிகளில் எவை இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என மைக்கேல் கிளார்க்கிடம் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த மைக்கேல் கிளார்க், "நிச்சயமாக ஆஸ்திரேலியா சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்கு முன்னேறும். இந்தியா அணிக்கு எதிராக இறுதிப் போட்டியில் விளையாடும். நான் ஆஸ்திரேலியா தான் வெற்றி பெற வேண்டும் என விரும்புகிறேன். ஆனால், இந்தியா தான் இந்த முறை சாம்பியன்ஸ் டிராபி வெல்லும்."
"இந்தியா தான் இப்போது உலகின் சிறந்த ஒரு நாள் அணியாக உள்ளது. நம்பர் ஒன் ஒருநாள் அணியாகவும் உள்ளது. எனவே, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இறுதிப்போட்டியில் மோதும். அதில் இந்தியா ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெறும்" என்றார். அதாவது இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு ஆஸ்திரேலியா கடுமையான சவாலை கொடுக்கும். ஆனாலும் இந்தியா ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என மைக்கேல் கிளார்க் கணித்து இருக்கிறார்.
மேலும் அவர் ரோஹித் சர்மா நல்ல ஃபார்மில் இருப்பதை சுட்டிக்காட்டி இருக்கிறார். ரோஹித் சர்மா இந்திய அணியில் அதிக ரன் குவித்த வீரராக இருந்தாலும் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை எனக் கூறி இருக்கிறார்.