
தப்பித்த இங்கிலாந்து
நாட்டிங்கம் டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து, முதல் இன்னிங்ஸில் 183 ரன்கள் எடுக்க, இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 278 ரன்கள் எடுத்தது. பிறகு இங்கிலாந்து இரண்டாம் இன்னிங்ஸில் கேப்டன் ஜோ ரூட், சதம் மூலமாக 303 ரன்கள் எடுத்தது. இந்தியாவுக்கு 209 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில், இந்தியா 1 விக்கெட் இழப்பிற்கு 53 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி நாளில் 9 விக்கெட்டுகள் மீதமிருக்க தலைக்கு 30 ரன்கள் அடித்திருந்தாலே இந்தியா எளிதில் வென்றிருக்கும். ஆனால், கடைசி நாளில் கொட்டித் தீர்த்த மழை, ஒரு ஓவரைக் கூட வீச முடியாமல் தடுத்தது. இது இந்திய அணிக்கு மட்டுமின்றி, ரசிகர்களுக்கும் பெரும் ஏமாற்றமாக அமைந்தது. இங்கிலாந்தும் தோல்வியில் இருந்து தப்பியது.

இந்தியாவுக்கே சான்ஸ்
இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் லெஜண்ட் மைக்கேல் ஹோல்டிங், இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர் குறித்து தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார். அதில், "இந்திய அணி இத்தொடரை தங்களுக்கு சாதகமாக தொடங்கியுள்ளது. இப்போது வரை இத்தொடர் இந்தியாவுக்கு சாதகமாகத் தான் இருக்கிறது. அவர்கள் தொடரை அழகாக வெல்ல வேண்டும். இந்தியா, இத்தொடரை வெல்ல முடியாது என்று கூறுவதற்கு எனக்கு எந்த காரணமும் கிடைக்கவில்லை. அவர்கள் ஏற்கனவே இங்கிலாந்து சூழலுக்கு ஏற்ப தங்களை தகவமைத்துக் கொண்டனர். அவர்கள் முடிவைப் பற்றி கவலைப்படாமல் விளையாடுவதில் கவனம் செலுத்த வேண்டும். இளம் மற்றும் அனுபவம் வாய்ந்த கிரிக்கெட் வீரர்களுடன் அணி சமநிலையுடன் இருக்கிறது.

கான்ஃபிடன்ஸ் லெவல்
இங்கிலாந்து டெஸ்ட் தொடரை வெல்ல முடியும் என்று இந்திய அணி நம்புகிறதோ இல்லையோ.. ஹோல்டிங் நம்புகிறார். அவரது கருத்துக்களை நாமும் ஹோல்ட் செய்து வைப்போம். அவர் சொன்னது போல் இந்திய அணி இத்தொடரில் வெல்ல நிறைய வாய்ப்புகள் உள்ளது. அதற்கு காரணம் அவர் சொன்னது போல் சரிசமமான சீனியர்ஸ் + ஜுனியர்ஸ் கலவை கொண்ட அணி இருப்பது தான். குறிப்பாக, பும்ராவின் அபார ஸ்பெல் அணிக்கு ஒரு புதிய இரத்தத்தை பாய்ச்சது போன்று இருந்தது. இதனால், சிராஜ் கூட இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை வம்பிழுக்கும் அளவுக்கு அணி வீரர்கள் மத்தியில் கான்ஃபிடன்ஸ் லெவல் அதிகரித்தது.

கடும் சவால்
இந்த நிலையில் தான் நாளை இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது. லார்ட்ஸில் சாதாரண தோசை சுட்டால் கூட ஸ்பெஷல் தோசையாகிடும். அப்படி இருக்கும் போது, இந்தியா - இங்கிலாந்து லார்ட்ஸில் மோதுகிறது எனில், அதன் ஸ்பெஷல் வேற லெவல் எனலாம். இப்போட்டியில் வெல்ல நிச்சயம் இரு அணிகளும் கடுமையாக மோதிக் கொள்வார்கள் என்பதில் சந்தேகமில்லை. மறக்காதீர்கள்.. கிரிக்கெட்டின் சொர்க்கபுரியான லார்ட்ஸில் தோற்பதை இங்கிலாந்து வீரர்கள் விரும்ப மாட்டார்கள். ஸோ, கோலி அணிக்கு கடும் சவால் காத்திருக்கிறது எனலாம்.


Click it and Unblock the Notifications











