“செஞ்ச வரைக்கும் போதும் சாமி.. வீட்டுக்கு கிளம்புங்க”.. இங்கிலாந்து கோச் மீது வாகன் விமர்சனம்
லண்டன்: இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணி தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதைத் தொடர்ந்து, தலைமைப் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய இயக்குநர் ராப் கீ ஆகிய இருவரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என்று முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் வலியுறுத்தியுள்ளார்.
நியூசிலாந்து டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி நடைபெற்றுக் கொண்டு இருந்த போதே இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரும், கேப்டனுமான பென் ஸ்டோக்ஸ் (35 வயது) சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவர் ஓய்வு பெற்ற அடுத்த நாளே ட்ரெண்ட் பிரிட்ஜில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி 160 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்து 1-2 என்ற கணக்கில் தொடரை இழந்தது.

இங்கிலாந்து அணி தனது கடைசி 10 டெஸ்ட் போட்டிகளில் 2 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளதுடன், தரவரிசையில் 7-வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து 'ஸ்டிக் டு கிரிக்கெட்' என்ற பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசிய மைக்கேல் வாகன், "நான் பார்த்தவரை போதும் என்று தோன்றிவிட்டது. மெக்கல்லம் ஒரு நல்ல மனிதராக இருக்கலாம், ஆனால் அவர் சிறந்த பயிற்சியாளர் அல்ல. நாம் உலகளவில் முதலிடத்தைப் பிடிக்க முயற்சிக்க வேண்டும். ஆனால் நாம் தற்போது 7-வது இடத்தில் இருக்கிறோம். கடந்த 10 போட்டிகளில் பெற்ற 2 வெற்றிகளும் மோசமான ஆடுகளங்களிலேயே கிடைத்தன. இங்கிலாந்து கிரிக்கெட் இன்னும் சிறப்பாகச் செயல்பட வேண்டும். இதில் எனக்கு மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது" என்று காட்டமாகத் தெரிவித்தார்.
மேலும், இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய இயக்குநர் ராப் கீ-யின் பதவிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக வாகன் கூறினார். "ராப் கீ-யின் பணி தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. வீரர்களுக்கு சரியாகப் பயிற்சி அளிக்கப்படவில்லை. ஒருவேளை முன்னாள் பயிற்சியாளர் ஆண்டி பிளவர் தலைமையில் இந்த அணி இருந்திருந்தால் இப்படிப்பட்ட மோசமான முடிவுகள் கிடைத்திருக்குமா? அதற்கான வாய்ப்பே இல்லை" என்று அவர் சுட்டிக்காட்டினார்.
2022-இல் இயக்குநராகப் பொறுப்பேற்ற ராப் கீ, மெக்கல்லமை டெஸ்ட் பயிற்சியாளராக நியமித்தார். பின்னர் 2024 செப்டம்பரில் அனைத்து வடிவ கிரிக்கெட் போட்டிகளுக்கும் மெக்கல்லமே தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். தற்போது பென் ஸ்டோக்ஸ் ஓய்வு பெற்றுள்ள நிலையில், இங்கிலாந்து கிரிக்கெட் அணி நிர்வாகம் பெரிய அளவில் மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டும் என்ற குரல் வலுத்து வருகிறது.


Click it and Unblock the Notifications
