லண்டன்: ஆன்டர்சனிடம் வம்பிழுத்த, அஸ்வின் மீது ஐசிசி ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் டிவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.
மும்பையில் நேற்று முடிவடைந்த 4வது டெஸ்ட் போட்டியின்போது, பேட் செய்ய வந்த இங்கிலாந்தின் கடைசி விக்கெட்டான ஆன்டர்சனை நோக்கி, இந்திய ஸ்பின்னர் அஸ்வின் ஏதோ சர்ச்சைக்குறிய வகையில் பேசினார்.

இதுகுறித்து மைக்கேல் வாகன் டிவிட்டரில் ஐசிசிக்கு எழுப்பியுள்ள கேள்வியில் பென் ஸ்டோக்சை கண்டித்த நீங்கள், அஸ்வினுக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கேட்டுள்ளார்.
மொகாலி டெஸ்டில் கோஹ்லியை பார்த்து பென் ஸ்டோக்ஸ் முனுமுனுத்ததால், அவரை ஐசிசி எச்சரித்திருந்தது. ஆனால் அஸ்வினை ஐசிசி எதுவும் சொல்லவில்லை.
இதுகுறித்து நேற்று கோஹ்லி கூறுகையில், எனது பேட்டிங் திறமை குறித்து ஆன்டர்சன் கூறியதால் அஸ்வின் ஆத்திரத்தில் இருந்தார். அதுபற்றியே அவர் ஏதோ சொன்னார். இதில் வேடிக்கை என்னவென்றால், நான் சமாதானப்படுத்தினேன். ஆனால் அஸ்வின் கெட்ட வார்த்தை எதையும் பேசவில்லை. இவ்வாறு கோஹ்லி கூறியிருந்தார்.