கோலி அதிருப்தி
இந்த தோல்வி குறித்து பேசியிருந்த விராட் கோலி ஐசிசி-ன் மீது அதிருப்தி தெரிவித்திருந்தார். அதில் அவர், உலகின் தலைசிறந்த டெஸ்ட் அணியை ஒரே ஒரு போட்டியின் மூலம் தேர்ந்தெடுப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. இது ஒரு டெஸ்ட் தொடர் என்பதால், வெற்றியாளரை தீர்மானிக்க 3 போட்டிகள் கொண்ட தொடராக நடத்தப்பட்டிருக்க வேண்டும்.
பேசுப்பொருள்
எந்த அணியால் தொடக்கத்தில் இருந்து மற்ற அணியை வீழ்த்த முடிகிறதோ அல்லது எந்த அணியால் மீண்டு எழுந்து வர முடிகிறதோ, அதுதான் வெற்றியாளரை தீர்மானிக்கும். வெறும் 2 நாட்களில் அழுத்தம் நிறைந்த போட்டியில் வெற்றி பெற்று காட்டுவதல்ல. எனக்கு அதில் நம்பிக்கை இல்லை எனத்தெரிவித்திருந்தார். கோலியின் இந்த குற்றச்சாட்டு தான் இன்று கிரிக்கெட் உலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
வாகன் பதிலடி
இந்நிலையில் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து ட்வீட் செய்துள்ள அவர், 3 போட்டிகள் கொண்ட தொடராக நடத்துவதற்கு கால இடைவெளி எங்கு உள்ளது? ஐபிஎல் தொடரில் 2 வார போட்டிகளை பிசிசிஐ குறைக்குமா? சந்தேகம் தானே. இறுதிப்போட்டி என்பது ஒரே போட்டியால் தீர்மானிக்கப்பட வேண்டிய ஒன்று. அந்த ஒரு போட்டிக்குள் அணிகளும் வீரர்களும் சிறப்பாக செயல்பட முற்படுவார்கள். அது அவர்களை சிறந்த வீரர்களாக மாற்றும் எனக்கூறியுள்ளார்.
பயிற்சி
இதே போல இந்திய அணிக்கு சரியான பயிற்சி ஆட்டம் இல்லாதது தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இந்திய அணி கடைசியாக இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரில் பங்கேற்ற அனுபவத்துடன் களமிறங்கியது. ஆனால் நியூசிலாந்து அணியோ, டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னதாக இங்கிலாந்தில் அந்நாட்டு அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி பயிற்சி பெற்றது குறிப்பிடத்தக்கது.