போட்டிகள் முடக்கம்
உலகம் முழுவதும் விளையாட்டுப் போட்டிகள் முடங்கிக் கிடக்கின்றன. எந்த போட்டியையும் நடத்தும் அளவுக்கு நிலைமை இயல்புக்குத் திரும்பவில்லை. ஆங்காங்கே சில நாடுகளில் விளையாட்டு செயல்பாடுகள் மெதுவாக தொடங்க ஆரம்பித்துள்ளன. இந்த நிலையில் கிரிக்கெட் போட்டிகளும் எப்போது நடைபெறும் என்ற ஆவலில் வீரர்களும், ரசிகர்களும் காத்துள்ளனர்.
மைக்கேல் வாகன் டிவீட்
இந்த நிலையில்தான் மைக்கேல் வாகன் ஒரு டிவீட் போட்டுள்ளார். அதில், கடந்த வாரம் நிறைய மக்கள் பீச்சுகளுக்குப் போயிருந்தனர். அதேபோல இந்த வாரம் ஆயிரக்கணக்கானோர் கூடி போராட்டம் நடத்த முடிகிறது. அப்படியானால் அடுத்த வாரம் நிச்சயம் உள்ளூர் கிரிக்கெட்டைத் தொடங்கி விடலாம் என்று கூறியுள்ளார் மைக்கேல் வாகன். இந்த டிவீட்டுக்கு இரு விதமான கருத்துக்கள் கிளம்பியுள்ளன.
அச்சத்தை கைவிட்ட மக்கள்
மக்களை அரசுகள் கைவிட்டு விட்டன. மக்களும் அச்சத்தை விட்டு விட்டு, சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் போராட்டங்களில் ஈடுபடுவதும், வெளியில் நடமாடுவதுமாக உள்ளனர். இந்த நிலையில் விளையாட்டுப் போட்டிகளை மட்டும் ஏன் நிறுத்தி வைக்க வேண்டும். அதையும் அனுமதிக்க வேண்டியதுதானே என்று பலரும் கேட்க ஆரம்பித்துள்ளனர்.
இதே நிலைதான்
உலகம் முழுவதும் இதேதோன் நிலை அமெரிக்காவில் மக்கள் இயல்பாக வெளியில் நடமாடுகின்றனர். மாஸ்க் போடுவது அங்கு கட்டாயப்படுத்தப்படவில்லை. இதனால் பலரும் சுதந்திரமாக சுற்றுகின்றனர். தற்போது ஜார்ஜ் பிளாய்ட் படுகொலையை எதிர்த்து பெருமளவில் அங்கு போராட்டங்களும் வெடித்துள்ளன. இதனால் கொரோனா மேலும் பரவுமோ என்ற அச்சமும் அதிகரித்துள்ளது. இதைத்தான் வாகன் தனது டிவீட்டில் வெளிப்படுத்தியுள்ளார் என்று தெரிகிறது.