லண்டன் : இந்தியா - இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டி வரும் ஆகஸ்ட் 30 முதல் தொடங்க உள்ளது. முதல் மூன்று டெஸ்ட் முடிவில் இங்கிலாந்து 2-1 என தொடரில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் விராட் கோலி முதல் மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்தது போல, நான்காவது போட்டியிலும் சதம் அடிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த கேள்வியை ரசிகர் ஒருவர் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான்-இடம் ட்விட்டரில் கேட்டார்.

அதற்கு பதிலளித்த வான், இரண்டே வார்த்தைகளில் நச்சென்று "Highly Likely" (அதிக சாத்தியமாக) என பதிலளித்துள்ளார்.
இந்த டெஸ்ட் தொடர் தொடங்கும் போது, கோலி இங்கிலாந்தில் ரன் குவிக்க வாய்ப்பில்லை, 2014 தொடரில் ரன் குவிக்கவில்லை என்பன போன்ற சந்தேகங்கள் எழுந்தன. எனினும், தற்போது தன் திறமையை காட்டி இங்கிலாந்து முன்னாள் கேப்டனே அடுத்த போட்டியிலும் சதம் அடிப்பார் எனக் கூறும் நிலைக்கு மாற்றிவிட்டார்.
கடந்த 2௦14ஆம் வருடம் இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் தொடரில் மிக மோசமாக ஆடினார். அதை சுட்டிக் காட்டி தன் மீது எழுந்த விமர்சனங்களுக்கு முதல் டெஸ்டிலேயே சதம் அடித்து பதில் அளித்தார்.
மீண்டும் மூன்றாவது டெஸ்டிலும் 97 மற்றும் 1௦3 ரன்கள் என ரன் குவிப்பில் ஈடுபட்டார். தற்போது, இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அதிக ரன் குவித்த வீரர் கோலி தான். ஆறு இன்னிங்க்ஸ்களில் 440 ரன்கள் எடுத்து 73.33 ஆவரேஜ் வைத்துள்ளார் கோலி. அவருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் ஜானி பேர்ஸ்டோ ஐந்து இன்னிங்க்ஸ்களில் 206 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
இந்தியா டெஸ்ட் தொடரைக் கைப்பற்ற அடுத்த இரண்டு டெஸ்ட்களையும் வெல்ல வேண்டும். எனவே, கோலி மட்டுமல்ல அனைத்து பேட்ஸ்மேன்களும் ரன் குவிப்பில் ஈடுபட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.