
டெல்லி: கால்பந்து போட்டிகளின்போது, இடையில் வீரர்களை வேறு அணிகள் வாங்கிக் கொள்ளும் வாய்ப்பு அளிப்பது போல, ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டியிலும் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. இதில் யார் யார் எந்தெந்த அணியில் இருந்து மாறும் வாய்ப்பு உள்ளது என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் நடந்து வருகிறது. இதுவரை 24 ஆட்டங்கள் முடிந்து உள்ளன. ஒவ்வொரு அணியும் தலா 6 ஆட்டங்களில் விளையாடி உள்ளன. சில அணிகள் காயம் காரணமாக சில வீரர்களை இழந்துள்ளன. இந்த சீசனில் 60 ஆட்டங்களில், கிட்டத்தட்ட பாதி அளவு ஆட்டங்கள் முடிய உள்ள நிலையில், முதல் முறையாக வீரர்களை மாற்றிக் கொள்ளும் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.

இதுவரை நடந்த 10 சீசன்களில் இல்லாத இந்த புதிய வசதி, இந்த சீசனில் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு குறிப்பிட்ட அணி, மற்றொரு அணியில் இருந்து வீரரை தேர்வு செய்ய முடியும். இந்த வாய்ப்பு, ஆட்டம் எண் 28ல் இருந்து, 42 வரை வழங்கப்பட உள்ளது.
ஆனால், இதில் சில கட்டுப்பாடுகள் உள்ளன. அதாவது ஒரு குறிப்பிட்ட அணிக்காக ஒரு ஆட்டத்தில்கூட விளையாடாத அல்லது இரண்டு போட்டிகளுக்கு மேல் விளையாடாத வீரர்களை மற்றொரு அணி பேரம் பேசி வாங்கிக் கொள்ளலாம். ஆனால், இந்த முறை வெளிநாட்டு வீரர்களை மட்டுமே மற்றொரு அணி வாங்க முடியும்.
அதன்படி, இந்த சீசனில் மும்பை அணியின் ஆடம் மில்னே, ஜேபி டும்னி, டெல்லியின் சந்தீப் லாமிசனே, ஹைதராபாத்தின் அலெக்ஸ் ஹேல்ஸ், பெங்களூர் அணியின் கோலின் டி கிராண்ட்ஹோமே, மோயின் கான், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டேவிட் வில்லே ஆகியோரை மற்றொரு அணி வாங்க முடியும்..