வந்தா இந்தியாவுக்கு கோச்சா வருவேன்.. உங்களுக்கு “நோ”! பாக். வங்கதேசம் முகத்தில் கரியைப் பூசிய அவர்!
மும்பை : இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்து வாய்ப்பு கிடைக்காத மைக் ஹெஸ்ஸன் பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் கொடுத்த வாய்ப்புக்களை புறக்கணித்து விட்டதாக பரபரப்பு தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
அவர் இந்திய அணிக்கு பயிற்சியாளர் ஆகவே முயற்சித்தார் என்று கூறப்படுகிறது. மற்ற அணிகள் அழைத்தும் அவர் செல்ல மறுத்தது பெரும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னாள் நியூசி. பயிற்சியாளர்
மைக் ஹெஸ்ஸன் முன்னாள் நியூசிலாந்து பயிற்சியாளர் ஆவார். அவர் தலைமையில் தான் அந்த அணி புத்துணர்வு பெற்றது. குறிப்பாக 2015 உலகக்கோப்பை இறுதிப் போட்டி வரை சென்றது. மேலும், இவரது பயிற்சி அளிக்கும் முறை வீரர்களுக்கு பிடித்தமானதாகவும் இருந்தது. அதிரடி பேட்டிங்கை அடிப்படையாக வைத்து இவர் நியூசிலாந்து அணியை வடிவமைத்தார்.

ஐபிஎல் பயிற்சியாளர் பதவி
அதன் பின் கடந்த ஆண்டு ஐபிஎல் அணியான கிங்ஸ் லெவன் பஞ்சாப்பிற்கு தாவினார். அந்த அணி பெரிய வெற்றிகளை குவிக்கவில்லை. புள்ளிப் பட்டியலில் ஆறாம் இடத்தையே பிடித்தது. இந்த நிலையில், கடந்த மாதம் அந்த அணியின் பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்தார்.

வாய்ப்பு கிடைக்கவில்லை
இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கவே அவர் ராஜினாமா செய்ததாக தகவல்கள் வெளியானது. ஆனால், அவருக்கு இந்திய அணி பயிற்சியாளர் பதவி கிடைக்கவில்லை. ரவி சாஸ்திரிக்கே மீண்டும் பயிற்சியாளர் பதவி போனது.

பாக், வங்கதேசம் முயற்சி
இந்த நிலையில், அவரை வங்கதேசம், பாகிஸ்தான் அணிகள் வளைக்க முயற்சிப்பதாக கூறப்பட்டது. அவரும் அந்த அணிகளுடன் பேசி வருவதாக கிசுகிசுக்கப்பட்ட நிலையில், அவர் அந்த இரு அணிகளையும் கண்டு கொள்ளவில்லை என்றும், தேடி வந்த தேசிய அணி பயிற்சியாளர் பதவியை வேண்டாம் என்று கூறி விட்டதாக செய்தி வெளியாகி உள்ளது.

இந்தியா மட்டும் தான்
வந்தால் இந்திய அணிக்கு மட்டும் தான் பயிற்சியாளராக வருவேன் என்ற முடிவில் மைக் ஹெஸ்ஸன் இருந்ததாகவும், அதனால் தான் பாகிஸ்தான், வங்கதேச அணிகளை அவர் புறக்கணித்தார் என்றும் கூறப்படுகிறது.

அதிர்ச்சி முடிவு
கிரிக்கெட் வட்டாரத்தில் இது அதிரடி, அதிர்ச்சி முடிவாகவே பார்க்கப்படுகிறது. பணம் கொட்டும் ஐபிஎல் பயிற்சியாளர் பதவி, உலகின் முன்னணி அணியான இந்திய அணியின் பயிற்சியாளர் பதவி என இரண்டும் இல்லாத நிலையில், அடுத்த கட்டமாக சம்பளம் தரக் கூடிய பாகிஸ்தான், வங்கதேச அணிகளை புறக்கணித்து இருக்கிறார் மைக்.

காரணம் என்ன?
மைக் ஹெஸ்ஸன் அவராகவே தான் நியூசிலாந்து அணியை விட்டு விலகினார். அப்போதே அவர் பயிற்சியாளராக இருப்பது அலுப்பாக இருக்கிறது என்பது போலத் தான் காரணம் கூறினார். அடுத்து பகுதி நேர வேலை போன்ற ஐபிஎல் அணி பயிற்சியாளர் பதவியில் இருந்தார்.

சிறப்பு வர்ணனையாளர்
மேலும், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் சிறப்பு வர்ணனையாளராக இருக்கிறார். அதுவே போதும் என்ற முடிவுக்கு வந்து, இந்திய அணி தவிர்த்து மற்ற அணிகளின் பயிற்சியாளர் பதவியை அவர் மறுத்து இருக்கலாம் என நம்பப்படுகிறது.


Click it and Unblock the Notifications