மும்பை: 2025 ஆசிய கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குறித்து கருத்து தெரிவித்த தென்னாப்பிரிக்க ஜாம்பவான் ஏபி டிவில்லியர்ஸை, முன்னாள் இந்திய கேப்டன் சுனில் கவாஸ்கர் கடுமையாக சாடியுள்ளார். "வெளிநாட்டு வீரர்களுக்கு இங்கு என்ன வேலை?" என்று காட்டமாக அவர் கேள்வி எழுப்பியுள்ளது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2025 ஆசியக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இருந்து நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் நீக்கப்பட்டது குறித்து ஏபி டிவில்லியர்ஸ் தனது யூடியூப் சேனலில் கருத்து தெரிவித்திருந்தார். அப்போது, "ஸ்ரேயாஸ் ஐயரின் நீக்கம் என்பது அவரது ஆட்டத்திறன் அடிப்படையில் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. அணிக்குள் ஏதேனும் ஈகோ பிரச்னைகள் இருக்கலாம். ஐபிஎல் மற்றும் உள்ளூர் போட்டிகளில் கேப்டனாக சிறப்பாகச் செயல்பட்ட ஒருவரை இப்படி நீக்கியதன் பின்னணியில் வேறு ஏதோ காரணம் இருக்கிறது" என்று அவர் கூறியிருந்தார்.

டிவில்லியர்ஸின் இந்தக் கருத்துக்குப் பதிலடி கொடுக்கும் வகையில்தான், சுனில் கவாஸ்கர் தனது காட்டமான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். இதுகுறித்து 'ஸ்போர்ட்ஸ்டார்' பத்திரிகையில் அவர் எழுதியுள்ள கட்டுரையில், "இந்திய கிரிக்கெட்டில் எந்தப் பங்களிப்பும் இல்லாத, அதைப் பற்றி முழுமையாக அறியாத வெளிநாட்டு வீரர்கள், இது போன்ற விவாதங்களுக்குள் மூக்கை நுழைப்பதுதான் எனக்குப் புரியாத புதிராக இருக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "அவர்கள் எவ்வளவு பெரிய வீரர்களாக இருந்தாலும் சரி, எத்தனை முறை இந்தியாவுக்கு வந்திருந்தாலும் சரி, இந்திய அணியைத் தேர்வு செய்வது பற்றிப் பேச அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை. அவர்கள் தங்களது நாட்டு கிரிக்கெட்டைப் பற்றி கவலைப்பட்டால் மட்டும் போதும். எங்கள் கிரிக்கெட்டைப் பற்றி நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். ஆச்சரியம் என்னவென்றால், அவர்கள் நாட்டு அணி தேர்வு செய்யப்படும்போது, அது குறித்து இவர்கள் வாய் திறப்பதே இல்லை" என்று கவாஸ்கர் விளாசியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், "எந்த இந்திய முன்னாள் வீரராவது, மற்ற நாட்டு அணித் தேர்வு குறித்துப் பேசுவதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? இல்லை, நாங்கள் எங்கள் வேலையை மட்டும்தான் பார்ப்போம். அவர்கள் யாரைத் தேர்வு செய்தால் எங்களுக்கென்ன? ஆனால், சமூக வலைதளங்களில் தங்களைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக, சில வெளிநாட்டு வீரர்கள் இப்படி இந்திய கிரிக்கெட் விஷயங்களில் தேவையில்லாமல் கருத்து தெரிவிக்கின்றனர். நமது ஊடகங்களும் அவர்களிடம் சென்று இந்திய கிரிக்கெட் பற்றிக் கேட்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கவாஸ்கர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.