பாகிஸ்தான் கிரிக்கெட்டில் வெடித்த எரிமலை! மிஸ்பா உல் ஹக் உள்ளிட்ட பிரமுகர்கள் அடுத்தடுத்து ராஜினாமா
லாகூர்: பாகிஸ்தான் கிரிக்கெட்டில் நிலவி வரும் தொடர் மாற்றங்களுக்கு மத்தியில், அந்நாட்டு தேர்வுக்குழு தலைவர் பதவியிலிருந்து மிஸ்பா உல் ஹக் விலகியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் நடுவே, ஏழு வீரர்கள் மற்றும் தலைமை பயிற்சியாளர் ஆகியோர் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏழு ஆண்டுகளில் மிஸ்பா தனது பதவியை ராஜினாமா செய்வது இது இரண்டாவது முறையாகும். 2019 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் மற்றும் முதன்மை தேர்வாளர் ஆகிய இரு பொறுப்புகளுக்கும் அவர் முதலில் நியமிக்கப்பட்டார்.

பின்னர், பயிற்சியாளர் பணியில் முழுமையாக கவனம் செலுத்துவதற்காக 2020 அக்டோபரில் முதன்மை தேர்வாளர் பதவியில் இருந்து அவர் விலகினார். தொடர்ந்து, 2021 ஆம் ஆண்டில் தலைமை பயிற்சியாளர் பதவியையும் மிஸ்பா ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து, கடந்த 2026 மார்ச் மாதத்தில் அவர் மீண்டும் தேர்வுக்குழுவில் ஒரு பொறுப்பில் நியமிக்கப்பட்டார்.
இது தொடர்பாக பாகிஸ்தான் ஊடக செய்திகளின்படி, செப்டம்பர் 9 அன்று எட்ஜ்பாஸ்டனில் தொடங்கவுள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான மாற்று வீரர்களாக இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்ட ஏழு வீரர்கள் குறித்து மிஸ்பாவிடம் எந்த ஆலோசனையும் நடத்தப்படவில்லை எனத் தெரிகிறது. இதனால் அதிருப்தியடைந்த மிஸ்பா, மின்னஞ்சல் மூலமாகத் தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார். தனது நோட்டீஸ் காலத்தை முடித்த பிறகு அவர் முறைப்படி தனது பதவியில் இருந்து விலகுவார்.
எட்ஜ்பாஸ்டனில் இங்கிலாந்துக்கு எதிராக நடக்கவுள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் டெஸ்ட் அணியில் மிகப்பெரிய மாற்றங்களை மேற்கொண்டதைத் தொடர்ந்து இந்த அதன்மை வாய்ந்த சர்ச்சை வெடித்தது.
மூத்த பேட்ஸ்மேன்களான சல்மான் ஆகா, முகமது ரிஸ்வான் மற்றும் இமாம்-உல்-ஹக் உட்பட ஏழு வீரர்கள் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாகவே சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர். இவர்களுடன் தலைமை பயிற்சியாளர் சர்பராஸ் அகமது மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர் உமர் குல் ஆகியோரும் பாகிஸ்தான் திரும்பிய உடன் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.


Click it and Unblock the Notifications

